செந்தில் பாலாஜி ஜாமீன் மனு; தள்ளுபடி செய்த உயர்நீதி மன்றம்!

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு; தள்ளுபடி செய்த உயர்நீதி மன்றம்!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் செய்து செய்யப்பட்ட தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 8வது முறையாக நீட்டிக்கப்பட்டு, அக்டோபர் 20 வரை சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், இரண்டு முறை ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்திருந்தது. இந்த நிலையில் செந்தில்பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சிறையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் (அக்டோபர் 16ல்) விசாரித்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் அறிக்கையை சுட்டிக்காட்டி, மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும், நீதிமன்றமே ஒரு மருத்துவரை நியமித்து செந்தில் பாலாஜி உடல் நிலை குறித்து ஆய்வு செய்யலாம் எனவும் வாதிட்டார். 

வேலை பெற்று தருவதாக கூறி ஒரு கோடியே 34 லட்சம் சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படும் 10 ஆண்டுகளில் அவருடைய வங்கி கணக்குகளையும், வருமான வரி கணக்கில் இருந்தும், அவர் குற்றமற்றவர் என்பது நிரூபணமாவதாகவும், உள் நோக்கத்துடன் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர். எல்.சுந்தரேசன் ஆஜராகி, செந்தில் பாலாஜி அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பென்-டிரைவில் சேகரிக்கப்பட்ட  தகவலின்படி, வேலை பெற்று தருவதாக கூறி 67 கோடியே 75 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டது.

மேலும்,  செந்தில் பாலாஜி, ஆரோக்கியமாக இருப்பதாகவும், மருத்துவ சிகிச்சை காரணங்களுக்காக  ஜாமீன் வழங்க முடியாது என ஏற்கனவே முதன்மை அமர்வு நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ள நிலையில், ஸ்டான்லி மருத்துவர்களின் அறிக்கைகளும் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனை சிகிச்சை அவசியம் என குறிப்பிடவில்லை எனவும் வாதிடப்பட்டது. 

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிலையில்,  ஜாமீன் வழங்கினால்  காட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்த நிலையில், இன்று தீர்ப்பளித்தார். நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த தீர்ப்பில், செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ அறிக்கைகளை பார்க்கும்போது, ஜாமீனில் விடுதலை செய்தால் தான் அவரது உடல் நிலையை கவனிக்க முடியும் என்ற நிலை இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் கடந்த கால நடவடிக்கைகள், இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கும் நிலை, சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக உள்ளது, சோதனைக்கு சென்ற வருமான வரித் துறை அதிகாரிகள் தாக்கப்பட்டது ஆகியவற்றை பார்க்கும்போது, செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுதலை செய்தால், அவர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சாட்சிகளை கலைப்பார் என்ற முடிவிற்கு வருவதை தவிர்க்க முடியாது என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருப்பது, இந்த வழக்கின் விசாரணைக்கு இடையூறாக இருக்கும் என்ற அமலாக்கத் துறை அச்சத்தில் நியாயம் உள்ளது என சுட்டிக்காட்டிய நீதிபதி, இந்த காரணங்களுக்குக்காக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க முடியாது என கூறி, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிக்க: தேக்கு மரங்களை கடத்திய தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்!