மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல்!
கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடல் பகுதியில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் மீனவர்களை தாக்கி அவர்களிடம் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆற்காட்டுதுறை மீனவர்கள் மீது நேற்று அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடல் கொள்ளையர்கள் இவர்களை வழிமறித்து 7 படகில்இருந்த 15க்கும் மேற்பட்ட மீனவர்களை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி இவர்கள் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, மீன்பிடி வலைகள் உள்ளிட்ட 10 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு மீனவர்களை தாக்கிவிட்டு சென்றுவிட்டனர்.
இத்தாக்குதலில் மீனவர்கள் எட்டு பேர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அந்தப் பதற்றம் தணிவதற்குள் இன்று அதிகாலை வெள்ளப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த
மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் பகுதியை சேர்ந்த வைத்தியநாதசுவாமி, ராமராஜன், செல்வராஜ் ஆகிய மூன்று பேரும் கடந்த 21ம் தேதி கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் மூன்று மீனவர்களையும் தாக்கி படகில் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவி, வாக்கிடாக்கி, பேட்டரி, செல்போன், 20 லிட்டர் டீசல் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு விரட்டி அடித்துள்ளனர்.
தொடர்ந்து இரண்டு நாள் தாக்குதலில் நிலை குலைந்து போன மீனவர்கள் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து அச்சமின்றி மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க:https://www.malaimurasu.com/posts/crime/Daughter-in-law-complains-of-dowry-against-Mettur-MLA