ஸ்ரீராமசேனா பிரமுகரை குத்தி கொன்ற வழக்கு : 6 பேரை கைது செய்த போலீசார்

ஒசூர் அருகே முன்விரோதம் காரணமாக ஸ்ரீராமசேனா பிரமுகர் குத்திக் கொல்லப்பட்ட வழக்கில் 6 பேர் கைது.

ஸ்ரீராமசேனா பிரமுகரை குத்தி கொன்ற வழக்கு : 6 பேரை கைது செய்த போலீசார்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே முன் விரோதம் காரணமாக ஸ்ரீராமசேனா நகர செயலாளர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்தில் 6 பேரை மத்திகிரி போலீஸார் கைது செய்தனர். ஒசூர் அடுத்த சொப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்பாபு. இவர் ஸ்ரீராம்சேனா ஓசூர் நகர செயலாளராக உள்ளார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த திலக் என்பவருக்கும் முன்விரோதம் (கிரிக்கெட் விளையாட்டு மற்றும் காருக்கு வழி விடுவது) இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று ஜனவரி 1ம் தேதியன்று மோகன்பாபு தனது 4 நண்பர்களுடன் சொப்பட்டி கிராமத்தின் அருகே உள்ள மாந்தோப்பில் மதுபானம் குடிக்க சென்றுள்ளனர். அச்சமயத்தில் அங்கு வந்த திலக் மற்றும் அவரின் நண்பர்கள் சேர்ந்து மோகன்பாபுவிடம் தகராறில் ஈடுபட்டு தாங்கள் கொண்டு வந்த கத்தியால் மோகன்பாபுவை குத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மத்திகிரி போலீஸார் மோகன்பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பின்  குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த மத்திகிரி போலீசார் அதே கிராமத்தைச் சேர்ந்த திலக், மூர்த்தி, பவன், அப்பு (எ) ராகேஷ், சுரேஷ், ஹேமந்த் ஆகிய 6 பேரை மத்திகிரி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். பின் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.