திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலைய கொள்ளையில் திடீர் திருப்பம்: மனைவியுடன் நாடகமாடிய ரயில்வே ஊழியர் கைது...

சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தில், திடீர் திருப்பமாக ரயில்வே ஊழியரே மனைவியுடன் சேர்ந்து கொள்ளை நாடகமாடியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலைய கொள்ளையில் திடீர் திருப்பம்: மனைவியுடன் நாடகமாடிய ரயில்வே ஊழியர் கைது...

பரபரப்பு மிகுந்த திருவான்மியூர் ரயில் நிலையத்தில், நேற்று அதிகாலை பயணிகள் டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் வெகுநேரமாகியும் டிக்கெட் கவுன்டரில் ஊழியர்கள் இல்லாததால் அதிருப்தி அடைந்த பயணிகள், சந்தேகத்தின் பேரில் ஊழியரின் அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது ஊழியர் டீக்காரம் என்பவர் கை, கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் இருந்துள்ளார். மேலும் கவுண்டரில் இருந்த ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 500 ரூபாய் பணமும் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. 

இதுகுறித்த தகவலின் பேரில் சென்ற போலீசார், டீக்காரத்தின் கட்டுகளை அவிழ்த்து விடுவித்ததோடு, சம்பவம் தொடர்பாக 2 தனிப்படைகள் அமைத்து விசாரணையை துரிதப்படுத்தினர். இந்த நிலையில், ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, சம்பவம் நடந்த அந்த நேரத்தில் டீக்காரத்தின் மனைவி வெளியேறி செல்வது தெரிய வந்தது.

அதன்பேரில் விசாரணை நடத்தியதில், பணத்திற்கு ஆசைப்பட்டு மனைவியுடன் கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியதை ஒப்புக்கொண்டுள்ளார் டீக்காரம். இதையடுத்து டீக்காரம் மற்றும் அவரது மனைவியை கைது செய்த தனிப்படை போலீசார், அவர்களிடம் இருந்த 1 லட்சத்து 32 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.