“சுஷாந்த் மரணம் திட்டமிட்ட செயல்”- சுஷாந்த் சகோதரி பிரியங்கா பரபர பேச்சு:
பாலிவுட்டின் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்து இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் சுஷாந்தின் சகோதரி, சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் நடிகை ரியா சகரோபர்த்தி குறித்து பேசியுள்ளார்.
இந்தியில் பவித்ர ரிஷ்தா என்ற தொடரின் மூலம், சின்னத்திரை உலகிற்கு அறிமுகம் ஆனார் சுஷாந்த் சிங் ராஜ்புத். அதன் வெற்றியைத் தொடர்ந்து, வெள்ளித் திரைக்கு முன்னேறி, “காய் போ சே” என்ற படத்தில் கதாநாயகனாக பாலிவுட்டில் களமிறங்கி வெற்றிப் பாதையை உருவாக்கினார். எந்த பின்னணியும் இல்லாமல் பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுக்கு இடையில், தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார். பின்னர் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த சுஷாந்திற்கு ரசிகர்களின் கூட்டம் அதிகம்.
2013ம் ஆண்டு தனது நடிப்பு பயணத்தைத் தொடர்ந்த சுஷாந்த் 2020 ம் ஆண்டு முடித்துக்கொண்டார். அதாவது ஜூன் 14, 2020 ம் ஆண்டு அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணம், இன்று வரை ஒரு மர்மமாகவே இருக்கிறது. அவர் உண்மையிலேயே தற்கொலை தான் செய்து கொண்டாரா? இல்லை அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கேள்வியும் கிளம்பி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரின் இறப்புக்கு போதை பொருள் பயன்படுத்தியது காரணமாக இருக்கலாம் என பல வதந்திகள் கிளம்பின.
இதனைத் தொடர்ந்து அவரது மர்ம மரணம் பற்றி விசாரிக்க வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அதில் இருந்து எந்த பெரிய தகவலும் வெளியாகாத நிலையில், போலீசில் இருந்து, அவரது வழக்கு, CBI-க்கு மாற்றப்பட்டது. பின், மத்தியப் புலனாய்வுத் துறை (Central Bureau of Investigation (CBI), அமலாக்கத்துறை (Enforcement Directorate (ED) மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் (Narcotics Control Board (NCB) ஆகிய பிரிவுகளுக்கு பெரும் பரபரப்பை உருவாக்கியதோடு, பல முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பல நாட்களுக்குப் பிறகு, தனது மௌனத்தைக் கலைத்த சுஷாந்தின் சகோதரி பிரியங்கா ஒரு பேட்டியில் பேசிய போது, சுஷாந்தின் வாழ்க்கையை, அவரது முன்னாள் காதலியும், பிரபல பாலிவுட் நடிகையுமான ரியா, அழித்துவிட்டதாக குற்றம் சாட்டினார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், "2019 முதல், ரியா சக்ரவர்த்தி அவரது வாழ்க்கையில் நுழைந்ததால் அவரது வாழ்க்கை பாழாகத் தொடங்கியது. முதன்முறையாக எனக்கும் என் சகோதரனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்ட ஆறு நாட்களுக்குள் எல்லாமே நடந்து முடிந்துவிட்டது." என்று கூறினார். இதனைத் தொடர்ந்து யாரோ வேண்டுமென்றே ரியாவை அவரது வாழ்க்கையில் அனுப்பியதாக சந்தேகிக்கிறீர்களா என்று தொகுப்பாளர் கேட்டதற்கு, "ஆம் நிச்சயமாக" என பதிலளித்துள்ளார்.
சுஷாந்தின் மரணத்தை ஒரு கொலை என்றும், அவரது மரணம் சதித்திட்டம் என்றும் அவர் கூறினார். இந்த வழக்கில் ரியாவை ஆதரித்தவர்களிடமும் விசாரணை நடத்தினார். மற்ற விஷய்னக்களில் தங்கள் வாயைத் திறக்காத சில பெரிய பாலிவுட் நட்சத்திரங்கள் தனக்கு ஆதரவளிக்க முன்வந்தது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
சுஷாந்திற்காக ரியா போதைப்பொருள் வாங்கியதாக NCB அறிக்கை விட்ட சில மணி நேரத்திலேயே நேர்காணல் வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒரு குற்றப்பத்திரிகையில், ரியா மற்றும் 34 பேர் உயர்மட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டனர்.
இந்த வழக்கில் ரியா செப்டம்பர் 2020 இல் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் கழித்து பம்பாய் உயர் நீதிமன்றத்தால் ஜாமீன் பெற்றார். ரியாவைத் தவிர, அவரது சகோதரர் ஷோய்க் சக்ரவர்த்தி மற்றும் பலர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் தற்போது ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக ரியா இதுவரை ஒரு பொது பேட்டியை மட்டுமே அளித்துள்ளார். இது தற்போது பெரும் பரபரப்பைக் கிளப்பி வருகிறது.