தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி: "4410 கோடிக்கு முறையாக கணக்கு காட்டவில்லை" வருமான வரித்துறை தகவல்!

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி: "4410 கோடிக்கு முறையாக கணக்கு காட்டவில்லை" வருமான வரித்துறை தகவல்!

தூத்துக்குடியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, சுமார் 4 ஆயிரத்து 410 கோடி ரூபாய் அளவிற்கு முறையாக கணக்கு காட்டவில்லை என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 

இந்தியா முழுவதும் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகம் தூத்துக்குடியில் செயல்பட்டு வருகிறது. இங்கு, கடந்த 27-ந் தேதி வருமான வரித்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 

முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை மற்றும் சோதனையின் இறுதியில், முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். முன்னதாக நிதி பரிவர்த்தனை அறிக்கையில், முறையாக கணக்கு காட்டப்படாததால் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.  

இந்நிலையில், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, சுமார் 4 ஆயிரத்து 410 கோடி ரூபாய் அளவிற்கு முறையாக கணக்கு காட்டவில்லை என வருமான வரித்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கையில், ரொக்க முதலீட்டில் 10 ஆயிரம் பேரின் கணக்குகளில் 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் அளவுக்கு நடைபெற்ற பண பரிவர்த்தனை குறித்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட வில்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. 

மேலும், கிரிடிட் கார்டு எனப்படும் கடன் அட்டைகள் மூலம் நடைபெற்ற 110 கோடி ரூபாய் அளவுக்கான பரிவர்த்தனைகளும், பொதுமக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய வட்டி தொகையில் 500 கோடி ரூபாய் அளவிற்கும் கணக்கில் இடம்பெறவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, 200 கோடி ரூபாய் ஈவுத்தொகையை பிரித்து அளித்ததில் முறைகேடு மற்றும்  600 கோடி ரூபாய் அளவுக்கு பங்குத் தொகையிலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மெர்க்கன்டைல் வங்கி சார்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட குறிப்பிட்ட நிதி பரிவர்த்தனை அறிக்கையில் பல முக்கிய விவரங்கள் இடம்பெறவில்லை என்றும் வருமான வரித்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:"என்னுடைய அமைச்சரை நீக்குவதற்கு உங்களுக்கு அதிகாரம் கிடையாது" மு.க.ஸ்டாலின்!