நிதி நிறுவனம் நடத்தி ரூ.15 லட்சம் மோசடி... இரவோடு இரவாக தலைமறைவான தம்பதி...

கோபிசெட்டிபாளையத்தில் பண மோசடி, பொருள் மோசடி என 50க்கும் மேற்பட்டவர்களிடம் 15 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்து விட்டு இரவோடு இரவாக தலைமறைவான தம்பதி.

நிதி நிறுவனம் நடத்தி ரூ.15 லட்சம் மோசடி... இரவோடு இரவாக தலைமறைவான தம்பதி...

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகேயுள்ள கீழ்வாணி மூங்கில்பட்டி பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர்  மகாலட்சுமி-சக்திவேல் தம்பதியினர். இவர்கள் அப்பகுதியில் உள்ளவர்களிடம் தனியார் நிதி நிறுவனத்தில் குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாக கூறி 50க்கும் மேற்பட்ட நபர்களிடம் 15 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்துள்ளனர்.

மேலும் சிலரிடம் நகையை அடமானம் வைத்து பணம் கொடுக்குமாறு கேட்டு பெற்றுள்ளனர். இன்னும் சிலரிடம் மொபைல் போன் லோன் மூலம் வாங்கித் தருமாறும் மாதாமாதம் தவணை தொகையை தாங்கள் செலுத்திவிடுவதாக தெரிவித்தும் பலரை கடனாளியாக்கினர்.  

இப்படி பண மோசடி, பொருள் மோசடி என பல்வேறு மோசடிகளை செய்த இந்த தம்பதியினர் இரவோடு இரவாக வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகினர். இதனை அறிந்த பணத்தை கொடுத்து ஏமாந்த 50க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள், தலைமறைவான மகாலட்சுமி - சக்திவேல் தம்பதியினரை கண்டுபிடித்து கைது செய்து, தங்களது பணத்தை மீட்டுத் தருமாறு ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தனர்.