நண்பரின் உதவியுடன் மாமியாரின் நகையை பறித்த மருமகள்!! என்ன காரணம்?

நண்பரின் உதவியுடன் மாமியாரின் நகையை பறித்த மருமகள்!! என்ன காரணம்?

பள்ளி நண்பரின் உதவியுடன் மருமகளே மாமியாரின் நகையை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் தேவி நகர் சிவகாமி தெருவைச் சேர்ந்தவர் லலிதா. வயது மூப்பின் காரணமாக வீட்டிலேயே இருக்கும் இவர், கடந்த 10-ந் தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இளைஞர் ஒருவர், வீடு புகுந்து லலிதா கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டார்.

இதுபற்றி தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் இந்த காட்சிகளை  வைத்து நடத்திய விசாரணையில், லலிதாவின் மருமகளான லதா என்ற மோகனசுந்தரி என்பவருக்கும் இந்த சங்கிலி பறிப்பில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, போலீசார் மோகனசுந்தரியை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அவர், “எனது தங்கையின் மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் மாமியார் லலிதா தனது நகையை கொடுத்து உதவினார். அதன்பிறகு அடகு வைத்த அவரின் நகையை மீட்டுத் தரக்கோரி அடிக்கடி என்னிடம் கேட்டு தொல்லை கொடுத்ததால் அதை மீட்டு கொடுத்தேன். இதனால் மாமியாரின் நகையை அபகரிக்க திட்டம்போட்டு என்னுடன் படித்த பள்ளி நண்பரான கார்த்திகேயன் என்பவரை மாமியார் வீட்டுக்கு அனுப்பி நகையை பறித்ததாக” வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து மருமகள் லதா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை உடனடியாக கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவான இன்னொரு குற்றவாளி கார்த்திகேயனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.