உல்லாசத்திற்கு அழைத்து நகையை பறித்து சென்ற கும்பல்- கணவன், மனைவிக்கு வலைவீச்சு....

ஆவடியில் உல்லாசத்திற்கு அழைத்து  15 சவரன் நகையை பறித்து சென்ற 2 பேரை கைது செய்த போலீசார், முக்கிய குற்றவாளிகளான கணவன், மனைவியை வலைவீசி தேடிவருகின்றனர். 

உல்லாசத்திற்கு அழைத்து நகையை பறித்து சென்ற கும்பல்- கணவன், மனைவிக்கு வலைவீச்சு....

சென்னை அடுத்த  சாஸ்திரி நகர்  தெருவை சேர்ந்த செந்தில்குமார் என்பவர், நியூஸ் பேப்பர் ஏஜென்டில் வேலை செய்து வருகிறார்.  இதற்கிடையில், கடந்த 5மாதத்துக்கு முன்பு எழும்பூரில் உள்ள கேளிக்கை விடுதிக்கு சென்று உள்ளார். அப்போது, ஆவடி பகுதியை சேர்ந்த பெர்சோனா  என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பிறகு அவர்கள் இருவரும் அடிக்கடி செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு பேசி வந்து உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 28-ம் தேதி பெர்சோனா செந்தில்குமாருக்கு தொடர்பு கொண்டு, எனது கணவர் வீட்டில் இல்லை. நீங்கள் வீட்டுக்கு வாருங்கள்" என அழைத்துள்ளார். இதனையடுத்து தனது காரில் கண்ணிமைக்கும் நேரத்தில் சென்ற செந்தில்குமாருக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி.. வீட்டில் பெர்சோனாவுடன் சேர்ந்து நான்கு பேர் இருந்துள்ளனர். பின்னர் அவர்கள் செந்தில்குமாரை மிரட்டி அவரது போனில் உள்ள கூகுள் பே மூலமாக 13 ஆயிரம் ரூபாய் பணத்தை மற்றோரு வங்கி கணக்கிற்கு பரிவர்த்தனை செய்துள்ளனர்.

மேலும், அவர் அணிந்திருந்த  தங்க சங்கிலிகள், பிரேஸ்லெட், மோதிரம் உள்பட 15சவரன் நகைகள் மற்றும் 2செல்போன் ஆகியவை பறித்து உள்ளனர். அதன்பிறகு அவர்கள் அனைவரும் சினிமாவில் வருவதை போன்று செந்தில்குமாரின் கண்களை துணியால் கட்டி,  காரில் ஏற்றி மதுரவாயல் பைபாஸ் சாலையில் கொண்டு போய் விட்டனர்.

நகைகளை பறிகொடுத்த செந்தில்குமார், உல்லாசத்திற்கு வரவழைத்து தன்னை ஏமாற்றி நகையை பறித்து சென்றவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சரணவன், அஜித் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், முக்கிய குற்றவாளியான கணவன், மனைவியை வலைவீசி தேடி வருகின்றனர்.