கள்ளக்காதலை கண்டித்த கணவன்... கொன்று புதைத்த மனைவி...!!

கள்ளக்காதலை கண்டித்த கணவன்... கொன்று புதைத்த மனைவி...!!

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் கள்ளகாதலை கண்டித்த கணவரை கொலை செய்து புதைத்த மனைவி உட்பட மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

புதுச்சேரி அரியாங்குப்பம்  மணவெளி பூங்கொடிபுரம் சேர்ந்தவர் ஞானசேகரன்.   இவர் புதுச்சேரி புதிய பேருந்து  நிலையத்தில் இரவு நேரத்தில் ஆட்டோ ஓட்டி வந்தார்.  இவரது மனைவி செல்வி.   இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த மாதம்  29 ம் தேதி காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற கணவரை காணவில்லை என அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் மனைவி செல்வி.   இதையடுத்து  ஞானசேகரனை போலீசார் தேடி வந்த நிலையில் தனது மகனை  மருமகள் செல்வி தான் ஏதேனும் செய்திருக்க கூடும் என ஞானசேகரனின் தந்தை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். 

இதனால் மனைவி செல்வியை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் பக்கத்து வீட்டுக்காரருடன் கள்ளத்தொடர்பு இருந்ததும், இதை அறிந்த கணவர் கண்டித்ததால் கள்ளக்காதலனை ஏவி கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.  ஞானசேகரை கத்தியால் வெட்டி கொலை செய்த கள்ளக்காதலன் செல்வம், முன்பே தோண்டி வைத்திருந்த பள்ளத்தில் புதைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து  செல்வி, செல்வம், அவரது நண்பர் பாலாஜி ஆகியோரை கைது செய்த போலீசார், தாசில்தார் முத்துகுமார் முன்னிலையில் ஞானசேகரன் உடலை தோண்டி எடுத்து  பிரேத பரிசோதனை செய்தனர்.  இந்த  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கொலையாளிகளை தாக்க முயன்றனர்.  இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க:   போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் உதகை மண்டலம்...!!!