மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்- கோவையில் அதிர்ச்சி சம்பவம்
கோவையில் வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை வேலாண்டிபாளையம் மஞ்சேஸ்வரி காலணி பகுதியில் மனைவி செல்வி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் குடியிருந்து வருபவர் ஆனந்தகுமார், ஆட்டோ ஓட்டுநனரான இவர் குடிக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவரது மனைவி குடிபோதையில் இருந்த ஆனந்த குமாரிடம் சண்டை போட்டதாக தெரிகிறது. சண்டையின்போது கணவர் ஆனந்தகுமாரிடம் நீ ஏன் வேறு ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருக்கிறாய் என சந்தேகப்பட்டு கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தகுமார் தான் வைத்திருந்த கத்தியால் செல்வியின் கழுத்தில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த செல்வியை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செல்வி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் காவல்துறையினர் செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த துடியலூர் காவல்துறையினர் தப்பி ஓடிய ஆட்டோ ஓட்டுநர் ஆனந்தகுமாரை இன்று அதிகாலை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.