திருமணம் முடிந்து 2 மாதமாகியும் கர்ப்பம் தரிக்கவில்லை... மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன்... 

மதுரையில் திருமணமான 2 மாதத்தில் கர்ப்பம் தரிக்கவில்லை என மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் முடிந்து 2 மாதமாகியும் கர்ப்பம் தரிக்கவில்லை... மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன்... 

மதுரை நியூ எல்லீஸ்நகர் ஆர்.சி.சர்ச் தெரு பகுதியை சேர்ந்த நாகவேல். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.  இவருக்கும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகேயுள்ள அய்யங்கோட்டை பகுதியை சேர்ந்த சுதா கடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து தனது தாய், தம்பி ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மனைவி சுதா தன்னை விட வயது மூத்தவர் என கூறியும், திருமணமாகி 60 நாட்கள் ஆகியும் கர்ப்பம் தரிக்கவில்லை என கூறியும், கடந்த ஒரு வாரமாக கணவர் நாகவேல் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று இரவு 8 மணியளவில் கணவன் அதீத கோபத்தில் தன்னை அடிப்பதாகவும், கொலை செய்துவிடுவார் என பயமாக இருப்பதால் தன்னை அழைத்துச் செல்லுமாறும் சுதா தனது தாயிடம் செல்போனில் தொடர்புகொண்டு கூறியுள்ளார்.

இதனிடையே கணவன், மனைவியிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவன் நாகவேல் மனைவி சுதாவின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். மகளை அழைத்துசெல்வதற்காக வந்த சுதாவின் தாய், தனது மகள் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதார்.

இதனிடையே மனைவியை கொலை செய்ததாக கூறி எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தில் கணவர் நாகவேல் சரண்டர் ஆகிய நிலையில் இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  திருமணமான மாதத்தில் மனைவி கர்ப்பம் ஆகவில்லை என கூறி கணவரே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.