காதலிக்க மறுத்த ஆசிாியையை கழுத்தை அறுத்த காதலன்!

காதலிக்க மறுத்த ஆசிாியையை கழுத்தை அறுத்த காதலன்!

நாகை அருகே காதலிக்க மறுத்த ஆசிரியை கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற வாலிபர் கைது

நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகலை அடுத்த ஏனங்குடி ஊராட்சி, தேப்பிராமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கமலபதி. இவரது மகள் ஜெயஸ்ரீ (வயது 24). இவர், ஏனங்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். 

காதல் முறிவு 

மருங்கூர் சத்திரம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த தங்கராசு மகன் மணிகண்டன்(35). கூலித்தொழிலாளியான இவரும், ஜெயஸ்ரீயும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஜெயஸ்ரீயிடம் அவரது பெற்றோர், மணிகண்டனிடம் பேசுவதை நிறுத்திக்கொள்ளுமாறு கூறியுள்ளனர். தனது பெற்றோர் கூறியபடி ஜெயஸ்ரீ, மணிகண்டனுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டார். காதலி தன்னுடன் பேசாததால் ஜெயஸ்ரீ மீது மணிகண்டன் மிகுந்த ஆத்திரத்தில் இருந்தார்.  

கழுத்தை அறுத்தார்

இந்நிலையில், பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய ஜெயஸ்ரீயை சந்தித்த மணிகண்டன், உன்னிடம் தனியாக பேச வேண்டும் எனக்கூறி ஜெயஸ்ரீயை அழைத்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த ஜெயஸ்ரீ, அதான் எல்லாம் முடிந்து விட்டதே. இனி என்ன பேச வேண்டி உள்ளது? என மணிகண்டனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், என்னிடம் ஒரு 10 நிமிடம் மட்டும் பேசி விட்டு சென்று விடு. அதன் பிறகு நான் உன்னை தொல்லை பண்ண மாட்டேன் என கூறியுள்ளார். 

இதனை நம்பிய ஜெயஸ்ரீ மணிகண்டனுடன் சென்றுள்ளார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெயஸ்ரீயின் கழுத்தை அறுத்து விட்டு மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். 

தீவிர சிகிச்சை

மணிகண்டன் கத்தியால் கழுத்தை அறுத்ததில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த ஜெயஸ்ரீயை அக்கம், பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

கைது

இதுகுறித்து திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலிக்க மறுத்த பெண்ணின் கழுத்தை அறுத்து வாலிபர் கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இதையும் படிக்க :இந்தியா கூட்டணி; பாஜகவை வீழ்த்த ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு!