சதுரங்க வேட்டை பட பாணியில் ஏமாற்ற நினைத்த மோசடி கும்பல்...! கைது செய்த காவல்துறை...!!

சதுரங்க வேட்டை பட பாணியில் ஏமாற்ற நினைத்த மோசடி கும்பல்...! கைது செய்த காவல்துறை...!!

சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் போலி கைத்துப்பாக்கி,குண்டுகள் மற்றும் நிர்வாணமாக தெரியும் கண்ணாடிகளுடன் பதுங்கி இருந்த நான்கு நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் பின்புறத்தில் உள்ள தங்கும் விடுதியில் சந்தேகத்திற்குரிய சில நபர்கள் அறையில் தங்கி வருவதாக சிஎம்பிடி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் போலீசார் பேருந்து நிலையம் பின்புறத்தில் உள்ள அறையில் தங்கி இருந்த நான்கு நபர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.  

அப்போது அவர்களிடமிருந்த போலியான ஒரு கை துப்பாக்கி, எட்டு தோட்டாக்கள் கை விலங்கு, லீடிங் செயின் மற்றும் கோபுர கலசமான ரைஸ் புல்லிங் கலச செம்பு, கருப்பு அரிசி 50 கிராம் மற்றும் போலி அடையாள அட்டைகள், நிர்வாணமாக தெரியக்கூடிய போலி கண்ணாடிகள் ஆகியவை இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அவர்களிடமிருந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் நான்கு நபர்களையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் பெங்களூரை சேர்ந்த சிவா, கேரளாவை சேர்ந்த குபய்ப், ஜித்து, இர்ஷாத் ஆகியோர் என்பது தெரியவந்தது.

இவர்கள் அனைவரும் ரைஸ் புல்லிங் கலசம்  என போலியானதை விற்று யாரையோ ஏமாற்ற வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க:"கேரளா ஸ்டோரி" தடை செய்ய சீமான் வலியுறுத்தல்...!!