குடும்பத்துடன் இன்ப சுற்றுலா...காரை வழிமறித்து துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம்

கணவன், குழந்தைகளுடன் சுற்றுலா சென்ற பெண் துப்பாக்கி முனையில் 2 மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மத்தியபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

குடும்பத்துடன் இன்ப சுற்றுலா...காரை வழிமறித்து துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம்

மத்திய பிரதேச மாநிலம்  ராஜ்கர் மாவட்டத்தை சேர்ந்த பெண் தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன், அதே பகுதியில் உள்ள சுற்றுலா தளத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை காரில் சென்றுள்ளார்.

இந்நிலையில் தனது சுற்றுலா பயணத்தை முடித்துவிட்டு குடும்பத்துடன் காரில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது சுற்றுலா தளத்திலிருந்து ரஹோஹர் என்ற பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் காரை வழியிலேயே இடைமறித்தனர்.

மேலும், மர்ம நபர்கள் இருவரும் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி காரில் இருந்த அப்பெண்ணையும், கணவனையும் கீழே இறங்குபடி கூறியுள்ளனர். இதனையடுத்து அந்த பெண் காரில் இருந்து கீழே இறங்கியவுடன் பைக்கில் வந்த இருவரில் ஒருவன் அருகில் உள்ள புதர் பகுதிக்குள் இழுத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். 

இதனைப் பார்த்து கொந்தளித்து தடுக்க முயற்சித்த அந்த பெண்ணின் கணவனை மற்றொரு நபர் துப்பாக்கியை நெற்றியில் வைத்து கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளான். அதன்பின்னர் அந்த இரு நபர்களும் பைக்கில் தப்பிச்சென்றனர்.

பின்னர் தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக அந்த பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளான சோனு, சுமீர் சிங் பர்மீர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.