தேனி: 12,500 வழக்குகளில் குற்ற பத்திரிக்கை தாக்கல்!

தேனி: 12,500 வழக்குகளில் குற்ற பத்திரிக்கை தாக்கல்!

தேனி மாவட்டத்தில் சுமார் 10வருடங்களுக்கு மேலாக நிலுவையில் இருந்த 12,500 வழக்குகளில்  குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தென்மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் பேட்டியளித்துள்ளார்.

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தென் மண்டல காவல் துறை தலைவர் அஸ்ரா கார்க் பங்கேற்றார். பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், நடப்பாண்டில் மட்டும் தேனி மாவட்டத்தில் 4 கொலை வழக்குகள், 3 போக்சோ வழக்குகள் மற்றும் 9 வழிப்பறி வழக்குகளில் நீதிமன்ற விசாரணை முடிவில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  மேலும் 56 கஞ்சா வழக்குகள் பதிந்து 139 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 22 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் குற்ற விசாரனை நடைமுறை சட்டம் 110 பிரிவின் கீழ் 68 நபர்களிடம் நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக 214 வழக்குகளில் சம்பந்தப்பட்ட கஞ்சா குற்றவாளிகளின் 379 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 16 கொலை வழக்குகள் பதிவாகி இருக்கிறது. அவற்றில் 13 கொலைகள் ஒரே குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக நிகழ்ந்துள்ளது. ரவுடி, பழிக்கு பழி வாங்குதல், சாதி மத ரீதியிலான மோதல் போன்ற சம்பவங்களால் ஏதும் நிகழ்வதில்லை என்றார்.  கடந்தாண்டு ஜூலை மாதத்தில் இருந்து தேனி மாவட்டத்தில் சுமார் 10வருடங்களுக்கு மேலாக நிலுவையில் இருந்த 12,500 வழக்குகளில்  இறுதி அறிக்கை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல்  செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மேலும், கஞ்சா ஒழிப்பு நடவடிக்கைக்காக பெரிய வியாபாரிகளை ஆந்திரா ஒடிசா வரை சென்று நமது போலீசார் கைது செய்து ஓர் ஆண்டுக்கு மேல் பிணையில் வராத அளவிற்கு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். கஞ்சா கடத்தலை தடுக்க தமிழக - கேரளா எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும்  துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

தென் மண்டலத்தில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு  உரிய  தண்டனை வாங்கி கொடுக்கும் நோக்கில்  ஒவ்வொரு கொலை வழக்கையும்  துணை கண்காணிப்பாளர் அளவிலான அதிகாரிகள் மூன்று முறை விசாரணை நடத்துவார்கள். மேலும் அந்த வழக்கை  கண்காணிப்பாளர் இரண்டு முறை விசாரணையும், ஆய்வும் செய்வார். அதன் பின்பு  கண்காணிப்பாளர் ஒப்புதலுக்கு பின்பே நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனக்கூறினார். இந்த சந்திப்பின் போது திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. அபினவ் குமார் மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிக்க:"ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தடியடி நடத்த உத்தரவிட்டது ஓ.பி.எஸ்.தான்" உண்மையை போட்டுடைத்த ஜெயக்குமார்..!