பெட்ரோல், டீசல், பர்னஸ் ஆயில் நூதன முறையில் திருட்டு... டேங்கர் லாரிகளில் இருந்து திருடிய பலே திருடர்கள்...

சென்னை அம்பத்தூரில் ஆயில் நிறுவன டேங்கர்களில் இருந்து பெட்ரோல், டீசலை திருடிவிட்டு, அதற்கு பதிலாக கலப்பட பொருளை கலந்து விற்பனை செய்து வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.

பெட்ரோல், டீசல், பர்னஸ் ஆயில் நூதன முறையில் திருட்டு... டேங்கர் லாரிகளில் இருந்து திருடிய பலே திருடர்கள்...

அம்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயில் நிறுவன டேங்கர்களில் இருந்து  பெட்ரோல், டீசல் மற்றும் பர்னஸ் ஆயிலை திருடிவிட்டு, அதற்கு பதிலாக வேறுபொருட்களை கலப்படம் செய்து விற்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், கள்ளிகுப்பம் பகுதியில் ஒரு குடோனில் இதுபோன்ற செயல்கள் நடைபெறுவதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து அப்பகுதியைச் சுற்றிவளைத்த காவல்துறையினர், அங்கிருந்த 5 பேரைக் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆயில் நிறுவன டேங்கர்களில் இருந்து பெட்ரோல், டீசல் மற்றும் பர்னஸ் ஆயிலை ஆயிரக்கணக்கான லிட்டர்கள் திருடி விட்டு அதற்கு பதிலாக வேறுபொருட்களை கலந்து விற்பனை செய்தது தெரியவந்தது.  

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணையும், பர்னஸ் ஆயிலுக்கு பதிலாக சோப்பாயில் அல்லது வாகன கழிவு எண்ணெய்யும் கலப்படம் செய்து அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, வீரராகவன், ஏழுமலை, மன்னராசு, ரமேஷ், ஜோகின் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் பாலாஜி, மணவாளன் ஆகியோரை தேடி வருகின்றனர்.