சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இருவர் கைது....

சென்னையில் சாலையில் நடந்து செல்லும் அழகான பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு, செல்போன் பறிப்பிலும் ஈடுபட்டு வந்த இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இருவர் கைது....

 சென்னை கீழ்ப்பாக்கம், அண்ணா நகர், அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் வரும் இருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்து, புகார்களில் கூறப்பட்ட பகுதிகளில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்து பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கவிதாசன்  மற்றும் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சக்திவேல்  என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவ்விருவரையும் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கவிதாசனுக்கு திருமணமாகி லதா என்ற மனைவி இருப்பதும் கடந்த 2019 ஆம் ஆண்டு மனைவியை தாக்கிய வழக்கில் சிறைக்குச் சென்ற கவிதாசன் பின் மனைவியைப் பிரிந்து சென்னையில் தனியாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், சென்னையில் கால்வாய் தோண்டும் பணி செய்து வந்த கவிதாசனுக்கு சக்திவேலுக்கும் பழக்கம் கிடைத்த நிலையில் இருவரும் சேர்ந்து சாலையில் தனியாகச் செல்லும் அழகான பெண்களை பின் தொடர்ந்து அவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும், பல்வேறு இடங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார்,நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து திருடப்பட்ட 5 ஆன்ராய்டு செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.