கள்ள நோட்டு அச்சடித்த கேரளாவைச் சேர்ந்த இருவர் கைது..!

கள்ள நோட்டு அச்சடித்த கேரளாவைச் சேர்ந்த இருவர் கைது..!

தேனி மாவட்டத்தில் போலி முத்திரைத்தாள் மற்றும் கள்ள நோட்டுபணம் அச்சடித்த கேரளாவைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள 18 ஆம் கால்வாய் பகுதியில் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்ட போது சந்தேகப்படும் படியாக கேரள மாநில பதிவெண் கொண்ட காரினை சோதனை செய்ததில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பாரத்தோடு பகுதியைச் சேர்ந்த முகமது சியாது (41) கோம்பையார் போஸ்ட் பகுதியைச் சேர்ந்த பிபின் தோமஸ் (36), ஆகிய இருவர் வந்துள்ளனர்.

அதில் முகமது சியாது தான் ஒரு பத்திர எழுத்தர் எனவும்,  கேரள மாநிலம் மொண்டி எருமை பகுதியில் பத்திர எழுதும் அலுவலகம் வைத்திருப்பதாகவும் கூறி அவர் கையில் வைத்திருந்த 5,000 மதிப்பிலான முத்திரைத் தாள் ஒன்றை காண்பித்துள்ளார். அதனை சோதனை செய்த போலீசார் அவை போலி முத்திரைத்தாள் என கண்டறிந்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் முகமது சியாது, பிபின் தோமஸ் ஆகிய இருவரும் தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட ஓடைக்கரைத்  தெருவில் உள்ள ஒரு  வாடகை வீட்டில் தங்கி கலர் பிரிண்டர் மூலம் முத்திரைத்தாள்கள் மற்றும் ரூபாய் தாள்களை போலியாக அச்சடித்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து ஓடைக்கரைத் தெருவில் உள்ள அவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்த போலீசார் அங்கு போலி ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள போலி முத்திரைத்தாள்கள் நான்கும் ரூபாய் 100 மதிப்புள்ள மூன்று போலி முத்திரைத்தாள்களும், மேலும் ஒரு பக்கம் மட்டும் அச்சடிக்கப்பட்ட மூன்றாயிரம் மதிப்புள்ள 500 ரூபாய் தாள்கள் மற்றும்  பிரிண்டர், ஜெராக்ஸ் மிசின் உள்ளிட்ட உபகரண பொருட்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முகமது சியாது மற்றும் பிபின் தோமஸ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.