ஒரே இரவில் இரட்டைக் கொலை...பதற்றத்தில் மக்கள்...!

ஒரே இரவில் இரட்டைக் கொலை...பதற்றத்தில் மக்கள்...!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மர்மமான முறையில் பெண் உள்பட இரண்டு பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜாமணி குடும்பம்:

விளாத்திகுளம் அருகே உள்ள காடல்குடி காவல் எல்லைக்கு உட்பட்ட கிராமம் பூதலாபுரம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பிச்சையா என்பவரின் மனைவி ராஜாமணி. 68 வயதான இவரின் கணவர் இறந்துவிட்ட நிலையில், இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் ஒருவருக்கு திருமணமாகி புதூரில் வசித்து வருகிறார். மற்றொரு மகன் தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். 

மர்மமான முறையில் உயிரிழப்பு:

இந்நிலையில், ராஜாமணியின் மகன் வழக்கம்போல் நேற்று  இரவு பணிக்கு சென்ற நிலையில் ராஜாமணி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, நள்ளிரவில்  திடீரென ரத்த காயங்களுடன் ராஜாமணி அலறி அடித்துக் கொண்டு வீட்டிலிருந்து ஓடி வந்துள்ளார். அங்குள்ள தேவர் சிலை அருகே கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

போலீசாருக்கு தகவல்:

ஆனால், உயிரிழந்த ராஜாமணியின் உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்துள்ளது. இதனை கண்ட தனியார் பஸ் ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் அதிர்ச்சி:

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்  விசாரணை நடத்தினர். விசாரணையின்போது,  அதே பகுதியில் உள்ள சந்தானம் என்பவரது மகன் பொன்னுச்சாமி என்பவர் வீட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். 

தீவிர விசாரணை:

ராஜாமணியை போன்று பொன்னுச்சாமியின் குடும்பத்தினரும் வெளியூர் சென்றிருந்த நிலையில் அவர் மட்டும் தனியாக இருந்துள்ளார் என்பது இந்த வழக்கில் குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து, உயிரிழந்த இரண்டு உடலையும் போலீசார் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இரட்டைக்கொலை:

நள்ளிரவில் நடைபெற்ற இந்த இரட்டை கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.