பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் திருட்டு... யார் அந்த திருடன்?

பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் திருட்டு... யார் அந்த திருடன்?

பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் திருடு போனதாக புகார் அளிக்கப்பட்ட விவகாரத்தில் வீட்டின் ஊழியர்கள் யாரும் திருடவில்லை என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னையில் உள்ள அபிராமபுரம் மூன்றாவது தெருவில் வசித்து வருபவர் பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ். இவர் தமிழ் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். 

இவரது வீட்டில் இருந்து லாக்கரில் இருந்த 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் காணாமல் போனதாக கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி விஜய் யேசுதாஸின் மனைவி தக்ஷனா அபிராமபுரம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்திருந்தார். 

இந்த நிலையில், வீட்டில் பணி செய்த ஊழியர்கள் 11 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் யாரும் திருடவில்லை என தெரியவந்துள்ளது. 

பாடகர் விஜய் யேசுதாஸ் வெளிநாட்டில் இருப்பதால் பலமுறை போலீசார் தொடர்பு கொண்டு அவரிடம் கேட்ட போதும் அவர் விசாரணைக்கு தற்போது வரை ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், புகார் அளித்த விஜய் யேசுதாஸின் மனைவி தக்ஷனாவும் காவல் நிலையத்தில் போலீசாரின் விசாரணைக்கு சரியான முறையில் விளக்கம் அளிக்கவில்லை என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. 

திருடு போனதாக சொல்லப்பட்ட 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் மிக பாதுகாப்பான நம்பர் பதிவிடும் லாக்கரில் வைக்கப்பட்டிருந்ததும், அவை உடைக்கப்படவில்லை என்பதும் மேலும், அந்த லாக்கரின் கடவுச்சொல் விஜய் ஏசுதாஸ் மற்றும் அவரது மனைவி தக்ஷனா ஆகிய இருவருக்கு மட்டுமே தெரியும் எனவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

முக்கியமாக, நகைகள் காணாமல் போனதாக தக்ஷனா கூறியது பிப்ரவரி மாதம் 18ம் தேதி. ஆனால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது மார்ச் மாதம் 30 ஆம் தேதி. நகைகள் தொலைந்து 40 நாட்களாக புகார் அளிக்காமல், 40 நாட்கள் கழித்து ஏன் புகார் அளிக்கப்பட வேண்டும்? என காவல்துறையினருக்கு தற்போது சந்தேகம் வலுத்துள்ளது. இது குறித்து போலீசார் விளக்கம் கேட்டபோது, விஜய் ஏசுதாஸின் குடும்பத்தாரிடமிருந்து சரியான முறையில் பதில் வரவில்லை என போலீசார் தெரிவிக்கின்றனர். 

ஒருவேளை நகைகள் திருடு போனதாக பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதா என போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இதனையடுத்து குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

முன்னதாக, நகைகள் பாதுகாப்பான நம்பர் லாக்கரில் வைக்கப்பட்டிருந்ததும், அந்த நம்பர் விஜய் யேசுதாஸ் மற்றும் அவரது மனைவிக்கு மட்டுமே தெரிந்திருந்ததும், லாக்கர் உடைக்கப்படாமல் நகைகள் திருடப்பட்டதாக கூறப்படுவதும் இந்த செய்தியை அறிந்தவர்களுக்கு ஒரு கேள்வியை எழுப்பியுள்ளது. யார் அந்த திருடன்?

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!