பாம்பை வைத்து நடனமாடிய இளைஞர் கைது!

பாம்பை வைத்து நடனமாடிய இளைஞர் கைது!

தேனியில் கோயில் திருவிழாவில் பாம்பை வைத்து நடனமாடிய இளைஞர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

தேனி அருகே உள்ள முத்துத்தேவன்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயில் திருவிழாவையொட்டி கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இளைஞர் ஒருவர் பாம்புகளுடன் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. 

இதையறிந்த தேனி வனச்சரகர் செந்தில்குமார் விசாரித்ததில் அந்த வீடியோவில் இருக்கும் இளைஞர் வீரபாண்டியைச் சேர்ந்த முகில்வண்ணன் (23) என்பது தெரியவந்தது. அவரை கண்டுபிடித்து தேனி வனச்சரகர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறையினர் அவரை கைதுசெய்தனர். மேலும் அவரிடமிருந்து 3 நல்ல பாம்புகள், 2 சாரை பாம்புகள் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். அந்த பாம்புகளுக்கு பற்கள் பிடுங்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கைதான முகில்வண்ணன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கோயில் திருவிழா நிகழ்ச்சியில் பாம்புகளுடன் நடனம் ஆடிய வழக்கில் தொடர்புடைய நபர்கள் குறித்தும் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பாம்புகளை தேனி வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர்.

இதையும் படிக்க: கைதுசெய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி சாலை மறியல் அறிவிப்பு..!