பயபக்தியுடன் சாமி கும்பிட்டுவிட்டு, திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமி!

பயபக்தியுடன் சாமி கும்பிட்டுவிட்டு, திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமி!

காஞ்சிபுரத்தில், கடை ஒன்றில் திருட வந்த மர்ம நபர், கல்லாபெட்டியில் இருந்த பெரிய தொகையை பார்த்து அதிர்ச்சியாகி, பயபக்தியுடன் சாமி கும்பிட்டுவிட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த சிருமாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (32). இவர் சுங்குவார்சத்திரம் பஜாரில் வாலாஜாபாத் செல்லும் சாலையில் ஹார்டுவேர்ஸ் கடை ஒன்றை நடத்தி வருகிறார். 

நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டுச் சென்றுள்ளார். பின்னர் இன்று காலை கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியுடன் உள்ளே சென்று பார்த்ததில், கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ 1 லட்சத்து 8,000 பணம் திருடப்பட்டு இருப்பதைக் கண்டு மேலும் அதிர்ச்சியுற்றார். 

தொடர்ந்து கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் பேண்ட் சட்டை அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் கடையின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைவதும், பின்னர் இரும்பு ஆயுதத்தின் மூலம் கல்லாப்பெட்டியை உடைத்து பணத்தை பார்த்ததும் அதிர்ச்சி அடைவதும், கல்லாபெட்டிக்கு பின்புறம் உள்ள சாமி புகைப்படங்களை கண்டு பயபக்தியுடன் கைகளால் வணங்கி பணத்தை திருடி செல்வது அதில் பதிவாகி இருந்தது. 

இதையடுத்து சிசிடிவி காட்சிகளோடு, ராஜ்குமார் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

இதையும் படிக்க || 22 ஆண்டுகளுக்கு பின் வழங்கப்பட்டுள்ள தண்டனை...60 வயது மூதாட்டிக்கு 4 ஆண்டுகள் சிறை!!