செய்யாத தவறுக்கு 5 மணி நேரம் சித்திரவதையை அனுபவித்த அப்பாவி இளைஞர்!!

செய்யாத தவறுக்கு 5 மணி நேரம் சித்திரவதையை அனுபவித்த அப்பாவி இளைஞர்!!

கள்ளக்குறிச்சி அருகே, எந்த தவறுமே இழைக்காத அப்பாவி இளைஞர் ஒருவரை கஞ்சா போதை ஆசாமி கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் (26). அருகிலிருக்கும் உணவகத்தில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார்.  தந்தை கூலி வேலை, மனநலம் பாதிக்கப்பட்ட தாய் என சிறிய குடும்பத்தில் வளர்ந்த ஐயப்பனுக்கு, குபேந்திரன் என்ற நண்பர் ஒருவர் இருந்தார். 

சமீபத்தில் ஐயப்பனின் செல்போன் பழுதடைந்ததைத் தொடர்ந்து, அதே நேரம் புதிய செல்போன் வாங்கியுள்ளார் குபேந்திரன். இதையடுத்து ஐயப்பனின் சிம் கார்டை சில நாட்கள் பயன்படுத்தி வந்துள்ளார் குபேந்திரன். 

இந்த நிலையில், அதே பகுதியில் உள்ள ஆகாஷ் என்பவர், ஐயப்பனுக்கு போன் செய்து நலம் விசாரித்துள்ளார். ஆனால் ஐயப்பனின் சிம் கார்டு குபேந்திரனிடம் இருந்தது ஆகாஷூக்கு இறுதி வரை தெரியாமலேயே இருந்துள்ளது. 

ஒரு கட்டத்தில் தொடர்ந்து போன் செய்து கொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த குபேந்திரன், ஆகாஷை மோசமாக திட்டியுள்ளார். தன்னை திட்டுவது ஐயப்பன் இல்லையென அறியாத ஆகாஷ், ஐயப்பன் மீது ஆத்திரம் கொண்டார்.

இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் ஐயப்பனை வீட்டிற்கு தேடி வந்து, காடு வரைக்கும் சென்று வரலாம் என அழைத்த ஆகாஷ், சங்கராபுரம் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றதும், கஞ்சா அடித்து போதை ஏறிய ஆகாஷ், தன்னை ஆபாசமாக பேசியது நீதானே என ஐயப்பனை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். 

தன்னை எதற்காக தாக்குகிறார் என்பதே தெரியாத, அப்பாவி இளைஞனான ஐயப்பன், எவ்வளவோ கெஞ்சியும் அவரை ஆகாஷ் விடுவதாக இல்லை. ஐயப்பனை நிர்வாணமாக்கி ஒரு முள் தடியை எடுத்து சரமாரியாக அடித்து சித்ரவதை செய்துள்ளார். 

இதனால் கதறித் துடித்த ஐயப்பன், ரத்தம் சொட்ட சொட்ட கரும்புக் காட்டில் இருந்து இரவு 9 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். இதனைப் பார்த்த பிற நண்பர்கள் உடனடியாக ஐயப்பனை சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். 

இதுகுறித்து அறிந்த பகண்டை கூட்டுரோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கஞ்சா போதையில் சித்ரவதை செய்த ஆகாஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் வேதனையடைந்த ஐயப்பன், தான் தாக்கப்பட்ட விவரங்களை வீடியோ மூலம் சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார். 

சிம் கார்டை கொடுத்தது மற்றொரு நண்பனிடம், ஆபாசமாக திட்டியது வேறொரு நண்பன்.. யாரோ பேசிய வார்த்தைக்காக, சம்பந்தமே இல்லாமல் 5 மணி நேரம் சித்ரவதைக்குள்ளான அப்பாவி இளைஞனைக் கண்டு பரிதாபமடைந்துள்ளனர்அப்பகுதி மக்கள்.

இதையும் படிக்க: கோவிலில் முதல் மரியாதைக்கு அடிதடி: முன்னாள் அதிமுக எம்எல்ஏ மற்றும் திமுக கிளை செயலாளர் கைது!