நகைக்காக வீடு புகுந்து மூதாட்டியை கொன்ற கொடூரம்!

  காசிமேட்டில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நகைக்காக வீடு புகுந்து மூதாட்டியை கொன்ற கொடூரம்!

சென்னை ராயபுரம் காசிமா நகர் 1வது தெருவில் 3வது மாடியில் வசித்து வருபவர் மைக்கேல் நாயகம் மீனவர், இவரது மனைவி அந்தோணி மேரி.   இவர்களுக்கு ரெக்ஸ் என்ற மகனும் சுபா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். மைக்கேல் நாயகம் நேற்று முன்தினம் மீன்பிடிக்க விசைப்படகில் கடலுக்குள் சென்று விட்டார். வீட்டில் அந்தோனிமேரி தனியாக வீட்டில் இருந்தார்.

இந்த நிலையில் 3வது தெருவில் உள்ள மகள் சுபா அந்தோணி மேரியை செல்போனில் பேசுவதற்கு முயன்றுள்ளார். ஆனால் செல்போனை எடுக்காததால் தாய் வீட்டிற்கு சென்றுள்ளா். வீட்டில் அந்தோணிமேரி மர்மமான முறையில் இறந்து கிடப்பதை பார்த்த சுபா கதறி அழுதார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து ராயபுரம் போலீஸ் உதவி கமிஷனர் உக்கிரபாண்டியன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, அந்தோணி மேரி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு அவர் உடல் மீது மிளகாய் பொடி தூவப்பட்டு பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த தாலி செயின், கம்மல், மோதிரம் உள்ளிட்ட 6 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு எழும்பூரில் இருந்து மோப்ப நாய் கரிகாலன் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி சென்று விட்டு மீண்டும் வீட்டின் அருகே வந்து நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்க வில்லை. மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகையை பதிவு செய்தனர். சம்பவம் குறித்து காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.