சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு : தென்காசியில் பரபரப்பு !

சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு : தென்காசியில் பரபரப்பு !

தென்காசி: காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட புளியங்குடி பகுதியில் கடந்த இருந்த தினங்களுக்கு முன்பு மாடசாமி என்பவரது மகனான தங்கசாமி (26) என்பவரும், அவரது பாட்டியான முப்பிலிமாடசாமி என்பவரும் மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக கூறி இரண்டு நாட்களுக்கு முன் புளியங்குடி காவல்துறையினர், இருவரையும் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டு பாளையம்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட தங்கசாமி நேற்று உயிரிழந்துள்ளார். இதையறிந்த உறவினர்கள் மற்றும் மக்கள், தங்கசாமியை காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு சிறையில் அடைத்ததால் தான் உயிரிழந்துள்ளார் எனவும் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் புளியங்குடி பேருந்து நிலையம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

சுமார் பல மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு காவல்துறையினர் வந்து சூழலை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தும், காவலர்கள் பற்றாக்குறையால் சாலை மறியல் போராட்டத்தை சமாளிப்பது கடுமையாக இருந்துள்ளது. பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, போராட்டத்தை கலைத்துள்ளனர்.

ஏற்கனவே, சாத்தான்குளத்தில், விசாரணையின் போது இறந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் சம்பவம் தமிழ்நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: விவசாயத்திற்கு பயன்படும் வகையில் அதிநவீன எலக்ட்ரிக் இரு சக்கர வாகனம்: கோவையை சேர்ந்தவர் அசத்தல்!