சளிக்கு சிகிச்சை பெற வந்த சிறுமி.. நாய்க்கடி ஊசி போட்ட செவிலியர்கள்!!

சளிக்கு சிகிச்சை பெற வந்த சிறுமி.. நாய்க்கடி ஊசி போட்ட செவிலியர்கள்!!

கடலுார் அரசு மருத்துவமனைக்கு சளி பிரச்னைக்காக சிகிச்சைக்கு வந்த சிறுமிக்கு, செவிலியர்கள் நாய்க்கடி ஊசி போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடலுார் அடுத்த கோதண்டராமபுரத்தை சேர்ந்தவர் கருணாகரன். இவரது மகள் சாதனா(13)  எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமிக்கு சளி தொந்தரவு காரணமாக, நேற்று மூன்தினம் காலை கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு, அவரது தந்தை கருணாகரன் அழைத்து சென்றுள்ளார். 

அங்கிருந்த டாக்டர், சாதனாவை பரிசோதனை செய்து, ஊசி மற்றும் மாத்திரை எழுதி கொடுத்துள்ளார். மருத்துவமனை பார்மசியில் மாத்திரை வாங்கிக்கொண்டு, சிறுமிக்கு ஊசி போட சென்றுள்ளனர். அங்கிருந்த செவிலியர்கள், சாதனா கொடுத்த டாக்டர் சீட்டை வாங்கிப்பார்க்காமல், இரண்டு ஊசிகளை போட்டு உள்ளனர்.

அப்போது, 'சீட்டை பார்க்காமல் என்ன ஊசி போடுகிறீர்கள்' என கருணாகரன் கேட்டார். செவிலியர்கள், 'நாய் கடிக்கு இரண்டு ஊசி தான் போடுவார்கள்' என கூறியுள்ளனர். கருணாகரன், சளி பிரச்னைக்கு ஊசி போட வந்ததாக கூறியதால், செவிலியர்கள் மழுப்பலாக பேசியுள்ளனர். 

மேலும், 'தெரியாமல் தவறு நடந்து விட்டது, மன்னித்துவிடுங்கள்' என கூறி உள்ளனர். அப்போது, திடீரென மயங்கி விழுந்த மாணவி சாதனாவை உள் நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 

பணியில் அலட்சியமாக இருந்து தவறாக சிகிச்சை அளித்த செவிலியர்கள், பணியில்  இருந்த டாக்டர் மற்றும் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருணாகரன் கடலுார் புதுநகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். 

அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். சளி சிகிச்சைக்கு வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட சம்பவம் போன்று, அரசு மருத்துவமனைகளில் அவ்வப்போது அலட்சியமாக சிகிச்சை அளிக்கப்படுவதாக செய்திகள் வருவதால், பொது மக்கள் மனதில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
 
இதையும் படிக்க: "அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல்": மத்திய இணையமைச்சர் நாரயணசாமி பேச்சு!