சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு... விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு... விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

கடலூரில், 13 வயது சிறுவனை, 19 வயது இளைஞன் ஒருவர் தண்ணீரில் முக்கி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். 13 வயது சிறுவனான மணிகண்டன் அண்ணாமலை நகரில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 23-ம் தேதியன்று சிதம்பரநாதன்பேட்டை கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்ற மணிகண்டன் குளத்தில் மூழ்கி இறந்ததாக தகவல் வெளியாகியது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மணிகண்டனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணிகண்டனை பரிசோதித்த மருத்துவர்கள் கழுத்து நெரிக்கப்பட்டு இருப்பதாக கூறியதால், சிறுவனின் பெற்றோர் அதிர்ந்து போயினர். இதையடுத்து நடந்த தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. 

சிதம்பரநாதன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் மகன் ராகுல் என்ற 19 வயது சிறுவன், மணிகண்டனிடம் நட்பாக பழகி வந்துள்ளார். பாட்டி வீட்டில் வசித்து வந்த மணிகண்டனை வெளியே அழைத்து ராகுல் ஊர் சுற்றி வந்துள்ளார். 

இந்த நிலையில் 20-ம் தேதியன்று, திருவிழாவுக்கு சென்ற மணிகண்டன், கோயிலேயே படுத்து உறங்கியுள்ளார். நள்ளிரவில் இயற்கை உபாதைக்கு, துணைக்கு வரச்சொல்லி அழைத்த ராகுல் மணிகண்டனிடம் பேச்சு கொடுத்தவாறே நடந்து சென்றுள்ளார்.

அப்போது 13 வயது சிறுவனான மணிகண்டன் ராகுலின் அக்காவை பற்றி தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராகுல், சிறுவன் என்றும் பாராமல், மணிகண்டனை கழுத்தை நெரித்து தண்ணீரில் அமுக்கி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராகுலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க || கழிவு மாம்பழங்களில் இருந்து 5,000 மாங்கன்றுகள்...விவசாயிகளாக மாறிய தூய்மைப் பணியாளர்கள்!!