நடுரோட்டில், இளைஞரை கல்லால் அடித்துக் கொலை செய்த கள்ளக்காதலி...

நடுரோட்டில், இளைஞரை கல்லால் அடித்துக் கொலை செய்த கள்ளக்காதலி...

கர்நாடகா | பாகல்கோட் மாவட்டம் ஜம்கண்டி ஊரைச் சேர்ந்த 21 வயதான மஞ்சுநாத் பல்லப்பா, பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தாயான சரோஜாவின் கணவன், துபாயில் வேலை செய்து வந்த நிலையில், தனிமையில் இருந்த சரோஜாவுக்கும் மஞ்சுநாத்திற்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து திடீரென வேலையை விட்டு விலகிய மஞ்சுநாத், சரோஜாவிடம் அவ்வப்போது செலவுக்கு அடிக்கடி பணம் வாங்கியதால் ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த சரோஜா, மஞ்சுநாத்துடனான உறவை முறித்துக் கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் முட்டல் மோதல் வெடித்த நிலையில் மஞ்சுநாத்தின் தொல்லை தாங்க முடியாமல் தவித்த சரோஜா, பெங்களுரில் உள்ள உறவினர் வீட்டுக்கே சென்று தஞ்சம் அடைந்தார்.

மேலும் படிக்க | மூதாட்டியைக் கொன்று பீரோவில் மறைத்து வைத்த அவலம்...

ஆனால் சரோஜாவை மறக்க முடியாத மஞ்சுநாத், கள்ளக்காதலியின் புதிய முகவரியையும் அறிந்து கொண்டு அங்கேயும் சென்றார். பெங்களூரில் உள்ள கே.பி.அக்ரஹாரா பகுதியில் வசித்து வந்த சரோஜாவை சந்தித்து தன்னுடன் வந்து விடுமாறு கேட்டதோடு, இதற்கு மறுக்கும் பட்சத்தில் தனக்கு பணம் வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். 

ஏற்கெனவே மஞ்சுநாத் குறித்த தகவல்களை உறவினர்களிடம் கூறிய நிலையில் தற்போது பணம் கேட்டு மிரட்டுவதையும் தெரிவித்தார் சரோஜா. இந்நிலையில் 6-ம் தேதியன்று நள்ளிரவு மணியளவில் கள்ளக்காதலி சரோஜாவை சந்திப்பதற்கு ரகசியமாக வந்துள்ளார் மஞ்சுநாத். அப்போது மறைந்திருந்த உறவினர்கள் சூழ்ந்து கொண்டு சரோஜாவிடம் வம்பிழுக்க வந்த இளைஞரை கப்பென்று பிடித்தனர்.

மேலும் படிக்க | மினிபேருந்து ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் - வீடியோ வைரல்...

இதையடுத்து சரோஜா உள்பட அனைவருமே மஞ்சுநாத்தை கீழே தள்ளியதோடு, சாலையில் கிடந்த கல்லைக் கொண்டு தலையில் ஓங்கி அடித்தனர். 6 பேரிடம் சிக்கிக் கொண்ட மஞ்சுநாத் தப்பிக்க முடியாமல் கல்லால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் அனைத்தும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவானதைத் தொடர்ந்து இதுகுறித்து விசாரித்த பெங்களூர் போலீசார், மஞ்சுநாத்தை கொலை செய்த சரோஜா மற்றும் அவரது உறவினர்கள் 5 பேரை கைது செய்து செய்து சிறையில் அடைத்தனர். இளைஞர் கள்ளக்காதலியை மறக்க முடியாமல், அவளை நாடிச் சென்று உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | ‘சூசைட் பாயிண்ட்’ வரை செல்ல அனுமதிக்க கோரிக்கை...