ஆண் வேடமணிந்து மாமியாரை தாக்கிய மருமகள் கைது...!

ஆண் வேடமணிந்து மாமியாரை தாக்கிய மருமகள் கைது...!

திருவனந்தபுரத்தில் ஆண் வேடம் தரித்து மாமியாரின் காலை கம்பியால் அடித்து உடைத்த மருமகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த பாலராமபுரம் பகுதி சார்ந்தவர் வாசந்தி. இவரது இரண்டாவது மகனான ரெதீஷ் குமார் என்பவரின் மனைவியான சுகன்யா ஆண் வேடம் தரித்து தனது மாமியாரான வாசந்தியின் காலை அடித்து உடைத்துள்ளார். மருமகள் கம்பியால் அடித்ததில் மாமியாருக்கு கால் உடைந்தது மட்டுமல்லாமல் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை 6 மணி அளவில் மாமியாரான வாசந்தி அருகில் உள்ள பால் நிலையத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது ஆண் வேடம் தரித்து வந்தவர் ஒருவர் வழிமறித்து இரும்பு கம்பியால் காலிலும், தலையிலும் தாறுமாறாக தாக்கியுள்ளார். இதில் பலமுறை காலில் கம்பியால் தாக்கியதில் வாசந்தியின் கால் ஒடிந்துள்ளது.

இவரது அழுகுரல் கேட்டு  அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அங்கிருந்து தாக்கியவர் தப்பி உள்ளார். காயப்பட்டு கிடந்த இவரை மீட்டு திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தொடர்ந்து திருவனந்தபுரம் போலீசாரும் வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அப்பகுதிகளில் உள்ள 40க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் பெண் ஒருவர் ஆண் போல் வேடம் அணிந்து வந்திருப்பதை தெரிந்து கொண்ட போலீசார்.

வீட்டில் உள்ளவர்களிடம்  விசாரணை மேற்கொண்டதில் கணவனின் சட்டை மற்றும் பேண்டை போட்டு முகமூடி அணிந்து வந்து மாமியாரான வசந்தியை தாக்கியது அவரது மருமகளான சுகன்யா என்பதை போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.

சுகன்யாவின் கணவர் ரெதீஷ்குமார் போதைக்கு அடிமையானவர் என்பதும்  போதையில் வீட்டிற்கு வரும் கணவர் தினசரி தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் அதற்கு முக்கிய காரணம் தனது மாமியார் தான் என கருதிக் கொண்ட சுகன்யா திட்டமிட்டு தாக்கியுள்ளார் என்பதும் தெரியவந்தது. இதை அடுத்து சுகன்யாவை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர் தொடர்ந்து அவரிடம் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.