பிரபல திரையரங்க கார்பரேட் அலுவலகத்தில் ஏசி வெடித்து விபத்து...!

பிரபல திரையரங்க கார்பரேட் அலுவலகத்தில் ஏசி வெடித்து விபத்து...!

சென்னை கிண்டி அருகே அம்பேத்கர் நகரில் ஜாஸ் சினிமாஸ் திரையரங்கின் கார்ப்பரேட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் நெருங்கிய உறவினரான விவேக் என்பவருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி இந்நிறுவனத்தின் 3வது தளத்தில் உள்ள ஏசி இயந்திரம் பழுதடைந்ததால் அதனை சரிசெய்ய ஜாபர்கான்பேட்டையில் உள்ள பாரத் ஏசி சர்வீஸ் சென்டருக்கு தகவல் தெரிவித்தனர்.

அன்று இரவு ஏசி சர்வீஸ் சென்டரில் இருந்து 3 ஊழியர்கள் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்திற்கு சென்று  பழுதடைந்த ஏசி இயந்திரத்தை சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென ஏசி கம்பிரசரில் கேஸ் வெளியேறி வெடித்து சிதறியது. அதில் சூளைமேடு பகுதியைச் சேர்ந்த  சின்னதுரை (50), மதுரவாயலைச் சேர்ந்த இந்திரகுமார் (22) மற்றும் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சரவணன்(41) ஆகிய 3 பேர்  60 சதவீதம் தீக்காயமடைந்தனர். உடனே அங்கிருந்த நிறுவன ஊழியர்கள் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு  போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த இந்திரகுமார், சின்னதுரை ஆகிய இருவர் மேல்சிகிச்சைக்காக கே.எம்.சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திரகுமார் கடந்த 4 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், நேற்று இரவு சின்னதுரையும் உயிரிழந்தார். மேலும், சரவணனுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்விபத்து குறித்து பரங்கிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.