பாஜக பிரமுகரை பொக்லைன் இயந்திரத்தை ஏற்றி கொல்ல முயற்சி..! திருப்பூரில் பரபரப்பு...!

பாஜக பிரமுகரை பொக்லைன் இயந்திரத்தை ஏற்றி கொல்ல முயற்சி..! திருப்பூரில் பரபரப்பு...!

பல்லடம் பொங்கலூரில் கழிவுநீர் சாக்கடையை மூடியதில் பொக்லைன் இயந்திரத்தை தடுத்து நிறுத்தி தட்டி கேட்ட பாஜக பிரமுகரை பொக்லைன் இயந்திரத்தை ஏற்றி கொல்ல முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் எஸ்ஏபி ரெசிடென்சி என்கிற குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கதிரவன்.இவர் கதிரவன் எர்த் மூவர்ஸ் என்ற பெயரில் சொந்தமாக பொக்லைன் இயந்திரம் வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார்.அதே பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் பாஜக ஓபிசி அணியில் நிர்வாகியாக இருந்து வருகிறார்.மேலும் செல்வகுமார் மாருதி எர்த் மூவர்ஸ் என்ற பெயரில் பொக்லைன் இயந்திரம் சொந்தமாக வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார்.

இந்நிலையில், எஸ்ஏபி ரெசிடென்சி குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் சாக்கடை அமைப்பதில் கதிரவனுக்கும் செல்வகுமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று மாலை செல்வகுமாரின் எதிர்ப்பை மீறி கதிரவனுக்கு சொந்தமான பொக்லைன் இயந்திரத்தை கொண்டு சாக்கடை கால்வாயை மண் கொட்டி மூடியதாக கூறப்படுகிறது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வகுமார் பொக்லைன் வாகனத்தின் குறுக்கே சென்று நின்று கொண்டு அதனை தடுத்து ஆபரேட்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இதை அடுத்து அங்கு சென்ற கதிரவன் தனது பொக்லைன் இயந்திரத்தின் ஓட்டுனரை எதிரே நின்று கொண்டிருந்த செல்வகுமார் மீது ஏற்றும் படி கூறியதாகவும் ஓட்டுனர் மறுத்ததால் அவரை இறக்கி விட்ட கதிரவன் பொக்லின் இயந்திரத்தை இயக்கிய படி செல்வகுமார் மீது மோதியதோடு இயந்திரத்தின் முன் புறமுள்ள பக்கெட்டை கொண்டு பலமாக மோதியதில் செல்வகுமார் இயந்திரத்தினுள் சிக்கிக்கொண்டார்.

அதனையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு திரண்டு வர கதிரவன் அங்கு இருந்து தனது ஓட்டுநருடன் தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.மேலும் தலை மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் படுகாயம் அடைந்த செல்வக்குமாரை மீட்டு அப்பகுதியினர் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அரசு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே இந்த கொடூர கொலை முயற்சி சம்பவம் குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக படம் எடுத்து வாட்ஸ் அப் பேஸ்புக் என சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கினர். இப்போது இந்த வீடியோ உள்ளூர் வாட்ஸ் அப் குழுக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரவி பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இதுகுறித்து பல்லடம் டிஎஸ்பி சௌமியா மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கொலை முயற்சிக்கு ஆளாக்கப்பட்ட செல்வகுமாருக்கு வித்யாவதி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.மேலும் பொக்லைன் வாகனத்தை இயக்கி பாஜக பிரமுகர் செல்வகுமாரை கொலை செய்ய முயன்ற புகாரில் சிக்கி உள்ள கதிரவன் மாதப்பூர் ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலர் லோகு பிரசாத்தின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க     | செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி!