காரைக்கால் துறைமுகத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ்...!!

காரைக்கால் துறைமுகத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ்...!!

காரைக்கால் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி கையாளப்படுவதை கண்டித்தும் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தியும் இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காரைக்காலில் தனியார் துறைமுகம் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் துவங்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. இத்துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு நிலக்கரி துகள்கள் பறந்து துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மூச்சுத் திணறல், சுவாச கோளாறுகள்  உள்ளிட்ட பல்வேறு நோய்களை ஏற்படுத்தி வருவதாக மக்கள் கருதுகின்றனர். எனவே துறைமுகத்தில் நிலக்கரி கையாளப்படுவதை தடை செய்ய வலியுறுத்தியும், துறைமுகத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வலியுறுத்தியும் துறைமுக வாயிலில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட தலைவர் சந்திரமோகன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரஞ்சித் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரசினர் கலந்துகொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து போராட்டக்காரர்கள் திடீரென தனியார் துறைமுகத்தை முற்றுகையிட முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்  துறைமுகத்தை  முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர்.

முன்னதாக கடந்த மாதம் இத்துறைமுகம் முன்பு வாஞ்சூர் கிராம மக்கள் மறியலில் இங்கு மறியலில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. துறைமுகம் அருகில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி, சிமெண்டால் சுற்றுசூழல் பாதிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.