குத்தகை அனுமதி விவகாரம்...! விவசாயிகள் போராட்ட அறிவிப்பு...!! 

குத்தகை அனுமதி விவகாரம்...! விவசாயிகள் போராட்ட அறிவிப்பு...!! 

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் உள்ள திருவாடுதுறை ஆதீனத்திற்குட்பட்ட நிலங்களுக்குரிய குத்தகைதாரர்களுக்கு உரிய குத்தகை அனுமதி வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்த போவதாக விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். 

நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே மதகநேரியில் திருவாடுதுறை ஆதீனத்திற்கு பாத்தியப்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிக்கு உரிய குத்தகை அனுமதி  மற்றும் அடவோலை வழங்க வலியுறுத்தி ராதாபுரம் வட்டார குத்தகை விவசாயிகள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. 

குத்தகை விவசாயிகள் சங்கத் தலைவர் தனபால் தலைமையில்  நடந்த கூட்டத்தில் திருவாடுதுறை ஆதீன இடப்பிரச்சனை சம்பந்தமாக ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் வைத்து நடந்த சமாதான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில் 90 நாட்களுக்கு பிறகும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்தும் விரைவில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருவாடுதுறை இட பிரச்சனை குறித்து சம்பந்தப்பட்ட மடாதிபதிகளை நேரில் சந்தித்து மனு அளிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. 

மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுப்பது என்றும் 20 நாட்களுக்குள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படாவிட்டால் பாளையங்கோட்டையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணைய ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் மதகனேரி, செம்பிகுளம், கடம்பன்குளம் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாய பொதுமக்கள் கலந்து கொண்டனர்.