இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து திருமண ஆசை காட்டி பணத்தை சுருட்டிய மர்மநபர்கள்...

இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து திருமண ஆசை காட்டி பணத்தை சுருட்டிய மர்மநபர்கள்...

இன்ஸ்டாகிராம் காதல், திருமண ஆசை காட்டி ரூபாய் 55 லட்சம் சுருட்டல், எட்டு பேர் மீது வழக்கு பதிவு.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாலன் நகரைச் சேர்ந்த ஜோசப் ராஜ் மனைவி ஆரோக்கிய மேரி. இவரது மகளை ஈரோட்டைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் விஜய் என்பவர் 2020 ஆம் ஆண்டு முதல் 2022 மே மாதம் வரை  இன்ஸ்டாகிராம் மூலம் பழகி திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். பின்பு அவர் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பரமக்குடியில் உள்ள பெண் வீட்டிற்கு வந்து ஜோசப்ராஜ் - ஆரோக்கிய மேரியின் மகளை திருமணம் செய்து கொள்ள ரூ 60 லட்சம் ரொக்கமும்,100 பவுன் தங்க நகையினை வரதட்சனையாக கேட்டு இரு வீட்டாரும் பேசி சம்மதித்து உள்ளனர்.

பின்பு பல தவணைகளில் விஜய்யின் பேங்க்  கணக்கின் மூலம் ரூ 44 லட்சத்தி 60 ஆயிரத்து 997 ம், நேரில் ரொக்க பணம் ரூ 10 லட்சமும் ஆக மொத்தம் ரூ 54 லட்சத்தி 60 ஆயிரத்தி 997 ம், 15 பவுன் நகைகளை பெற்றுள்ளார். மேலும் பெண்ணின் தாயார் ஆரோக்கிய மேரிக்கு சொந்தமான காரை விஜய் எடுத்துச் சென்று அவரது கையெழுத்தை போலியாக போட்டு போலி ஆவணங்கள் தயார் செய்து அதன்மூலம் விஜய் தனது பெயருக்கு மாற்றி மோசடி செய்துள்ளார்.

இதையறிந்த ஆரோக்கிய மேரி இதுகுறித்து விஜயிடம் கேட்டபோது அவரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், அவரது மகளின் தலைமுடியை பிடித்து இழுத்து அசிங்கமாக பேசி திருமணத்தை பற்றி பேசினால் குடும்பத்தோடு வெட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.இது குறித்து ஆரோக்கிய மேரி கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட க்ரைம் போலீசார், ஈரோட்டைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் விஜய், தந்தை கோவிந்தராஜ், தாயார் சாவித்திரி, சகோதரர் முருகேஷ் என்ற வருண், சகோதரி சங்கீதா மற்றும் உறவினர்கள் வைத்தீஸ்வரன், ரவிக்குமார், பிரீத்திமனுவேல் ஆகிய 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.