அருவியில் குளிக்க இனி கட்டணம்... வாகனங்கள் நிறுத்தவும் கட்டணம்...
அகஸ்தியர் அருவியில் குளிப்பதற்கு, வாகனங்கள் நிறுத்துவதற்கு வனத்துறை சார்பாக பணம் வசூலிக்கப்படுவதற்கு தடை விதிக்க கோரிய வழக்கு தொடர்பாக, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரைகிளை உத்தரவ்ட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அனைத்து சமுதாய பேரவை சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், "திருநெல்வேலி மாவட்டத்தில் அகஸ்தியர் அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு மிக அருகில் அகஸ்தியர் கோவில் மற்றும் கோடிலிங்கேஸ்வரர் கோவில் என்ற பெயரில் இரண்டு சிறிய கோவில்கள் உள்ளன. சைவத் தத்துவத்தின்படி சமய முக்கியத்துவம் வாய்ந்த இத்தலம் "கல்யாண தீர்த்தம்" என்று அனைவராலும் அறியப்படுகிறது. சிவபெருமானும் பார்வதியும் இந்த இடத்தில் துறவி அகஸ்தியருக்கு தரிசனம் கொடுத்ததாக நம்பப்படுகிறது.
மேலும் படிக்க | வடிவேலு காமெடி போல, ட்ரயல் வண்டியை அபேஸ் செய்த சம்பவம்...
காலப்போக்கில் அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருப்பதால் இந்த இடம் சுற்றுலா தலமாகவும் வளர்ந்து இந்த "அகஸ்தியர் நீர்வீழ்ச்சி" மற்றும் "கல்யாண தீர்த்தம்" ஆகியவற்றை ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் பார்வையிடுகின்றனர்.
மேலும் 1915 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தின் அப்போதைய மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் அனைவரும் அகஸ்தியர் நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்கும் அதில் குளிப்பதற்கும் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை...
இந்நிலையில் தற்போது அகஸ்தியர் அருவியில் குளிப்பதற்கும் மற்றும் வாகனங்கள் நிறுத்துவதற்கும் ஒரு நபருக்கு 30 ரூபாய் என்ற வீதத்தில் வனத்துறையினர் பணம் வசூல் செய்கின்றனர். இவ்வாறு பொதுமக்களிடம் பணம் வசூல் செய்வது ஏற்கத்தக்கதல்ல.
எனவே, அகஸ்தியர் அருவியில் குளிப்பதற்கு மற்றும் வாகனங்கள் நிறுத்துவதற்கு வனத்துறையினர் பணம் வசூலிக்கப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தனர்.
மேலும் படிக்க | வாட்ஸ்-அப்பில் சாதிப்பெருமை பேசியதால் வெட்டிக் கொலை... எங்கே செல்கிறது சமூகம்?
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.