சாலை வசதி செய்தி தரக்கோரி நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்...!

சாலை வசதி செய்தி தரக்கோரி  நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்...!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த முகவனூர் ஊராட்சிக்குட்பட்ட களத்துப்பட்டிக்கு செல்லும் சாலை மண் சாலையாக மட்டுமே உள்ளது. வையம்பட்டி - கரூர் பிரதான சாலையில் ஆத்துப்பாலம் அருகே இருந்து செல்லும் இந்த சாலையில் தான் தினமும் நூற்றுக் கணக்கான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்வோர் சென்று வருகின்றனர். ஆனால் மழை காலங்களில் மண் சாலையில் செல்ல முடியாத அளவில் சாலை சேரும் சகதியுமாக காட்சி அளிப்பதால் மக்கள் சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இது தொடர்பாக பல முறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த களத்துப்பட்டி மற்றும் பெரிய அனைக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று அந்த இடத்தில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுமட்டுமின்றி வையம்பட்டி - கரூர் சாலையில் ஆற்று பாலம் அருகே நெல் நாற்றுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் வையம்பட்டி ஒன்றியக்குழு தலைவர் குணசீலன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக சாலையை சரி செய்யும் பணி தொடங்கியதை அடுத்து மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் வையம்பட்டி - கரூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிக்க : மதுரையில் பகீர் சம்பவம்...போலீசார் தீவிர விசாரணை!