கொடைக்கானலில் கட்டண கொள்ளையில் உணவகங்கள்...! நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்...!!
கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளிடம் கட்டண கொள்ளையில் உணவகங்கள் ஈடுபட்டு வருவதால் உணவகங்கள் நடவடிக்கை எடுக்க சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில் கோடை சீசனுக்காக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகளால் கொடைக்கானல் நிரம்பி வழிகின்றது.
இதை பயன்படுத்தி கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் கட்டண கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக உணவகங்களில் அதீத கட்டண கொள்ளை அரங்கேறி வருகிறது. கொடைக்கானலில் பெரும்பாலான உணவகங்களில் விலை பட்டியல்கள் வைக்கப்படுவதில்லை. தாங்கள் சாப்பிடும் உணவு எவ்வளவு ரூபாய் என்று தெரியாமல் வெளிமாநில சுற்றுலா பயணிகள் சாப்பிட்டு உணவக உரிமையாளர்கள் சொல்லும் கட்டணத்தை செலுத்தி சாப்பிட்ட வயிறு எரிந்த நிலையில் வெளியே செல்லும் சூழல் ஏற்பட்டு வருகிறது.
ஒரு சில உணவகங்களில் காலாவதியான உணவுகள் கலப்பட உணவுகள் கூட அதிக விலைக்கு விற்கப்பட்டும் வருகிறது. உணவகங்களில் உணவுப் பொருட்களின் தரத்தை மட்டும் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை முன் வருகின்றது. ஆனால், கட்டண நிர்ணயத்தை தாங்கள் செய்ய முடியாது என்று அனைத்து தரப்பு நிர்வாகமும் கைவிரித்து விடுகின்றன. இது பற்றி பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை தான் எடுக்கப்படவில்லை. கூட்டத்திற்கு தகுந்தார் போல் உணவுப் பொருட்களின் விலையும் ராக்கெட் போல் உயர்ந்து விடுகிறது.
ஸ்டார் ஹோட்டலில் உள்ள உணவுப் பொருட்களின் விலை போல் கொடைக்கானலில் உள்ள சாதாரண உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை நிர்ணயிக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. உணவகங்களில் அரங்கேறி வரும் உணவுப் பொருட்களின் கட்டண கொள்ளையை உடனடியாக ஆய்வு செய்து தடுத்து நிறுத்த வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க:12 மணி நேர வேலை சட்டமசோதா...! திரும்ப பெற்றதாக முதலமைச்சர் அறிவிப்பு...!!