காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்...!

காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்...!

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் ஜான்(47). இவர் தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றி வருகிறார் நேற்று மாலை மாராடி கிராமத்தில் இருந்து கட்டபள்ளி பகுதிக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார். அந்த பகுதிக்கு செல்லும் வழியில் தரைப்பாலம் உள்ளது. கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் அதிக அளவில் சென்று கொண்டிருந்தது.

இந்த வழியாக சென்ற ஜான், தண்ணீர் குறைவாக வருவதாக எண்ணி தரைப் பாலத்தை கடக்க முயற்சி செய்தார். பாலத்தில் பாதி வழியை கடந்த பின்னர், தண்ணீரானது காரை இழுக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் பதறிப்போன ஜான், காரின் கதவை திறந்து வெளியேறி பத்திரமாக உயிர் தப்பினார். மேலும் இது பற்றி, தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய தனது காரை ஜேசிபி மூலம் பத்திரமாக மீட்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.