திருவண்ணாமலை : கூடுதல் ஆட்சியருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி...! என்ன காரணம்..?

திருவண்ணாமலை : கூடுதல் ஆட்சியருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி...! என்ன காரணம்..?

சேலம் மாவட்டம் மேட்டூரில் கூடுதல்ஆட்சியராக வீர் பிரதாப் சிங் பணியாற்றி வந்தார். இவருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி வீர் பிரதாப் சிங்கிற்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது  கூடுதல் ஆட்சியர் ஆஜராகாமல் அவருக்கு பதிலாக அவரது நேர்முக உதவியாளர் விஜி ஆஜராகி இருந்தார். இதில் அரசுத் தரிப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூடுதல் ஆட்சியர் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் மாவட்ட ஆட்சியருடன் வீர் பிரதாப் சிங், தேசிய எஸ்.சி எஸ்.டி ஆணையத்தில் ஆஜராக டெல்லி சென்றுள்ளதால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை ஏற்க மறுத்த நீதிபதி எம்.என்.ரமேஷ் பிறப்பித்த உத்தரவில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்   உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுபடி நேரில் ஆஜராகாமல் ஆட்சியரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு கூடுதல் ஆட்சியர் டெல்லிக்கு சென்றுள்ளார். நேரில் ஆஜராக முடியாததற்கு கூடுதல் ஆட்சியர் கூறும் காரணத்தை ஏற்க முடியாது. உயர் நீதிமன்றம்  பிறப்பித்த உத்தரவை அவர் அமல்படுத்தி விட்டதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடிந்து வைக்க வேண்டும் என கூடுதல் ஆட்சியர் தரப்பில் கூறப்பட்டிருந்தது. இதையும் ஏற்க முடியாது முதலில் உத்தரவை அமல்படுத்தாமல் அவமதித்து,  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நோட்டீஸ் அனுப்பிய பின்னரும் நேரில் ஆஜராகாமல் இருந்து, தற்போது வழக்கு முடித்து வைக்க வேண்டும் என்று கூறுவதையும் ஏற்க முடியாது. 

இந்நிலையில், தற்போது திருவண்ணாமலை கூடுதல்ஆட்சியராக பணியாற்றி வரும் வீர் பிரதாப் சிங்-க்கு எதிராக பிடிவாரண்டை பிறப்பித்து, விசாரணையை நவம்பர் 15 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் நவம்பர் 15 ஆம் தேதி அவரை நேரில் ஆஜர்படுத்துமாறு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க : பொங்கலுக்கு ரிலீசாகும் அஜித்தின் துணிவு.. ரெட் ஜெயண்ட் மூவிஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!