"உலக செவிலியர் தினம்" தஞ்சையில் நைட்டிங்கேல் படத்திற்கு மரியாதை செலுத்திய செவிலியர்கள்!

"உலக செவிலியர் தினம்" தஞ்சையில் நைட்டிங்கேல் படத்திற்கு மரியாதை செலுத்திய செவிலியர்கள்!

செவிலியர் தினத்தை முன்னிட்டு தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் செவிலியர்கள் நைட்டிங்கேல் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து, மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

கைவிளக்கு ஏந்திய காரிகை பிலாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது.  அதனை முன்னிட்டு தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் அம்மையாரின் 203 வது பிறந்தநாளை முன்னிட்டு நைட்டிங்கேல் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். மேலும் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

முன்னதாக செவிலியர் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சன் ராமநாதன் செவிலியர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார் மேலும் கேக்கு வெட்டி அவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் கே.வளர்மதி, கடந்த 30 ஆண்டுகளை கடந்து பதவி உயர்வு பெறாமல் செவிலியர்களாகவே பணி ஓய்வு பெறும் நிலை உள்ளது. எனவே  20 வருடங்களுக்குள் பணி உயர்வு பெற்றிடவும், 99 சதவீத பெண்களை கொண்ட செவிலியர் துறையில் குறிப்பிட்ட வயதிற்கு மேல் இயற்கையாகவே பெண்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளை கருத்தில் கொண்டு 55 வயதுக்கு மேல் இரவு பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் செவிலியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான செவிலியர்களுக்கான  தனி இயக்குனரகம் அமைக்கவும் கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இதையும் படிக்க:உரிய அனுமதி இன்றி நீர்த்தேக்கம்...! ஆந்திர அரசுக்கு 100 கோடி அபராதம்...!!