கணவன் வைத்த மின்வேலியில் சிக்கி இறந்த மனைவி...! சோகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன்...!!

கணவன் வைத்த மின்வேலியில் சிக்கி இறந்த மனைவி...! சோகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன்...!!

பள்ளிப்பட்டு அருகே பொம்மராஜபேட்டையில் விவசாய நிலத்தில் கணவன் பன்றிகளுக்கு வைத்த மின் வேலியில் சிக்கி மனைவி மரணமடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பொது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு வட்டம், பொம்ம ராஜபேட்டை, கிராமத்தில் வசிப்பவர் மேகநாதன் வயது(55) இவரது மனைவி துளசி வயது(50) ஆகிய இருவருக்கும் 3- மகள்கள் உள்ளனர். மூன்று பேருக்கும் திருமணம் நடந்து தனியாக வசித்து வருகின்றனர், இவர்களுக்கு கல்லூரி படிக்கும் மகன் ஒருவரும் இருக்கிறார். மேகநாதன் அதே ஊரில் அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில்  கரும்பு மற்றும் ரோஜா பூக்கள் போன்றவற்றை விவசாயம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை மேகநாதன் அவரது விவசாய நிலத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்து உள்ளார், அருகில் அவரது மனைவி துளசியும் மர்மமான முறையில் இறந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ஊர் மக்கள் அளித்த தகவலில் சம்பவ இடத்திற்கு வந்த பொதட்டூர்பேட்டை போலீசார் கணவன், மனைவி இருவரது உடலையும் கைப்பற்றி திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்,

சம்பவம் குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் முதல் கட்ட தகவலில்  மேகநாதன் தனது கரும்புத் தோட்டத்திற்கு பன்றிகள் வராமல் இருக்க மின் வேலி அமைத்துள்ளார். இதில் சிக்கி இவரது மனைவி துளசி இறந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மேகநாதன் "தான் வைத்த மின்வேலியில் மனைவி இறந்து விட்டார்" என்பதால் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. மேலும்  இந்த சம்பவம் குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கணவன் பன்றிகளுக்கு வைத்த மின் வேலியில் சிக்கி மனைவி மரணமடைந்ததும் இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் அப்பகுதி பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.