லியோ: அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதிக்கோரிய வழக்கு; நாளை ஒத்திவைப்பு!

லியோ: அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதிக்கோரிய வழக்கு; நாளை ஒத்திவைப்பு!

லியோ திரைப்படத்தின் ரசிகர்கள் காட்சிக்கு அனுமதிக்க வேண்டும், காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என்று கூறி தயாரிப்பு நிறுவனம் சார்பில் தாக்கல் செய்த  வழக்கை அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இவ்வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது.  

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், ’லியோ’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. அதாவது நேரம் குறிப்பிடாமல் ஒருநாளுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியிருந்தது. 

முன்னதாக, ’லியோ’ படக்குழு தரப்பிலிருந்து 'அக்டோபர் 19 ஆம் தேதி அதிகாலை 4 மற்றும் 7 மணிக்கும், 20 ஆம் தேதியில் இருந்து 24 ஆம் தேதி வரை காலை 7 மணிக்கும் சிறப்புக் காட்சிகள் ஒளிபரப்பு செய்ய வேண்டும்' என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக அரசு ’லியோ’ படத்தின் சிறப்புக் காட்சி தொடர்பாக சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன்படி 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரை அதிகபட்சம் 1 நாளுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

’லியோ’ சிறப்புக் காட்சிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா கடிதம் எழுதியிருந்தார். அதில், ’அனைத்து திரையரங்குகளிலும் ஒரே ஒரு சிறப்புக் காட்சி மட்டுமே திரையிட வேண்டும் என்ற உத்தரவின்படி காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருப்பதுடன், சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் செவன் ஸ்கீரின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் கர்னல் கணேசன் நீதிபதி அனிதா சுமந்த முன்பு அவசர முறையீடு செய்தனர். அப்போது லியோ படத்தை திரையிட காலை 4 மணிக்கு ரசிகர்களுக்கான காட்சிக்கு அனுமதிக்க வேண்டும், அதேபோல் காலை 9 மணி என்பதை 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். 

இந்நிலையில் இவ்வழக்கு இன்று மாலை விசாரணைக்கு வந்தது. அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிப்பதில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன ரசிகர்கள்  காட்சிக்கு அனுமதி அளிக்க கூடாது என மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டடுள்ளது என அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் வாதிட்டார். இந்நிலையில் அந்த வழக்கு சென்னைக்கு மாற்றப்பட்டுவிட்டதா? என கேள்வி எழுப்பிய நீதிபதி அது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும், நாளை காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என நீதிபதி அனிதா சுமந்த் அறிவித்துள்ளார். 

இதையும் படிக்க: கைதுசெய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி சாலை மறியல் அறிவிப்பு..!