லைகா நிறுவனத்தின் மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக்கோரி லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை  சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

லைகா நிறுவனத்தின் மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வந்த  இந்தியன் – 2 திரைப்படத்தின்   படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், தங்கள் நிறுவனத்தின் இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்கக்கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதி சதிஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, லைக்கா தரப்பில்,  படத்திற்கு முதலில் 150 கோடி ரூபாய் பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது 236 கோடி ரூபாய் வரை செலவு செய்து இருப்பதாகவும், ஆனாலும் 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்து இருப்பதாக தெரிவிக்கபட்டது.

இயக்குனர் சங்கருக்கு ஏற்கனவே 32 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீத தொகையை வழங்கவும் தயாராக இருப்பதாகவும், கடந்த மார்ச் மாதத்துக்குள் படத்தை முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில் இன்னும் படத்தை முடிக்காததால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி சதீஷ்குமார், இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க மறுத்து, லைகா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.