இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை...!!

இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை...!!

இயக்குனர் லிங்குசாமி காசோலை மோசடி வழக்கில், இயக்குனர் லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட 6 மாதங்கள் சிறை தண்டனையை உறுதி செய்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.

காசோலை மோசடி:

2014ல் நடிகர் கார்த்தி, சமந்தா நடிப்பில் "எண்ணி ஏழு நாள்" படத்தை தயாரிப்பதற்காக, நான் ஈ, இரண்டாம் உலகம் படங்களை தயாரித்த பி.வி.பி. கேப்பிடல் நிறுவனத்திடமிருந்து ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய் தொகையை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக இயக்குனர் லிங்குசாமி கடனாக பெற்றுள்ளார்.  கடனுக்காக லிங்குசாமி கொடுத்த 35 லட்சம் ரூபாய்க்கான காசோலை வங்கியில் பணமில்லாமல் திரும்பியதால், பிவிபி நிறுவனம் தரப்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணை:

இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து 2022 ஆகஸ்ட் 22ம் தேதி தீர்ப்பளித்தது.  மேலும், பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தது.

மேல்முறையீடு:

இந்நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து  லிங்குசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து, லிங்குசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளார்.

இதையும் படிக்க:   காரைக்காலில் கொரோனா தொற்றுக்கு ஒருவர் உயிரிழப்பு...!!