கவுதம் வாசுதேவ் மேனன் ஆஜராக விலக்கு -சென்னை உயர் நீதிமன்றம்...!!
வருமான வரி வழக்கில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் ஆஜராக விலக்களித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், ஃபோட்டான் கதாஸ் தயாரிப்பு என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குனராக 2011ம் ஆண்டு பதவி வகித்துள்ளார். ஆறு மாதங்களுக்கு பின் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.
இந்நிலையில், ஃபோட்டான் கதாஸ் தயாரிப்பு நிறுவனம், 2013-14ம் ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, அந்த நிறுவனத்துக்கு எதிராக வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. இதுதொடர்பாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வழக்கும் தொடர்ந்தது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக கவுதம் வாசுதேவ் மேனனும் சேர்க்கப்பட்டிருந்தார். வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி, எழும்பூர் நீதிமன்றம், அவருக்கு சம்மனும் அனுப்பியிருந்தது. நிறுவனத்தில் இருந்து வெளியேறிய நிலையில், தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி கவுதம் வாசுதேவ் மேனன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தனக்கும், ஃபோட்டான் கதாஸ் நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், தனக்கெதிரான இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டுமெனவும், விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன், எழும்பூர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு விலக்களித்து உத்தரவிட்டார். மேலும், கவுதம் வாசுதேவ் மேனனின் மனுவுக்கு பதிலளிக்கும்படி வருமான வரித்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை கோடை விடுமுறைக்கு பின் தள்ளிவைத்தார்.