மன்னிப்பு கோரினார் மென் இன் ப்ளாக் ஹீரோ:

மன்னிப்பு கோரினார் மென் இன் ப்ளாக் ஹீரோ:

பல மாத மௌனத்திற்குப் பிறகு, வில் ஸ்மித் இறுதியாக இந்த ஆண்டு ஆஸ்கார் விருதில் அவருக்கும் கிறிஸ் ராக்கிற்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தைப் பற்றி தற்போது பேசியுள்ளார். 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் வில் ஸ்மித் நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்தார்.  வில் ஸ்மித்-ன் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித் பற்றி பேசியதால் கோபமடைந்த ஸ்மித் மேடையில் இவ்வாறு நடந்து கொண்டார்.  இதற்கு ஸ்மித்திற்கு பெருமளவு ஆதரவும் எதிர்ப்பும் கிடைத்தது.

ஜூலை 30 அன்று ஸ்மித் அவருடைய யூடியூப் சேனலில் 6 நிமிட வீடியோவை வெளியிட்டுள்ளார். ஆஸ்கார் இரவில் நடந்த நிகழ்வைக் குறித்து அவரது ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார். 

அவர் கிறிஸிடம் பேச அணுகியதாகவும் ஆனால் கிறிஸ் தற்போது பேச தயாராக இல்லை என பதில் வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.   கிறிஸ் தன்னிடம் எப்போது பேச தயாராக இருக்கிறாரோ அந்நேரத்திற்காக ஸ்மித் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

கிறிஸ் ராக்கிற்கு:

கிறிஸ், நான் உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன். என் நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது. நீங்கள் பேசத் தயாராக இருக்கும்போதெல்லாம் நான் இங்கே காத்து இருக்கிறேன் என்று கிறிஸ் ராக்கிற்காக பேசியுள்ளார்.

நடிகர் கிறிஸின் குடும்பத்தினருக்கு: 

அந்த நேரத்தில் எத்தனை பேர் காயமடைவார்கள் என்று நான் நினைக்கவில்லை. கிறிஸின் தாயிடம், கிறிஸின் குடும்பத்திடம், குறிப்பாக அவரது சகோதரர் டோனி ராக்கிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். இது நிச்சயமாக சரிசெய்ய முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டார். 

ரசிகர்களுக்கு:

மக்களை ஏமாற்றியதை எண்ணி வருந்துகிறேன். நான் மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப வாழவில்லை என்பதை அறிந்து உணர்ச்சிபூர்வமாக கவலையடைகிறேன். 

அது குழப்பமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது என்று எனக்குத் தெரியும். எதிர்காலத்தில் என்னை நான் மேம்படுத்திக் கொள்வேன் என்ற உறுதிமொழியுடன் அவருடைய மன்னிப்பு உரையை முடித்தார் வில் ஸ்மித்.