நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்? தந்தையின் ஆசையை நிறைவேற்றுவாரா?

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள்..!

நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்? தந்தையின் ஆசையை நிறைவேற்றுவாரா?

நடிகை நயன்தாராவுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவரது தந்தை விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழில் ஐயா படம் மூலம் அறிமுகமானவர் நயன்தாரா. தொடர்ந்து 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக கோலோச்சி நிற்கும் நயன்தாராவை ரசிகர்கள் ”லேடி சூப்பர் ஸ்டார்” என்றே அழைப்பர். 

மலையாளத்தை தாயகமாக கொண்டிருந்தாலும் கூட தமிழ் சினிமாவின் மூலம் தான் உலக அளவில் பிரபலமானார் நயன்தாரா. தொடர்ந்து தமிழ் மட்டுமின்றி மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்து அசத்தினார். கிட்டத்தட்ட அனைத்து தரப்பு முன்னணி நடிகர்களுடன் ஒரு கலக்கு கலக்கி வரும் நயன்தாரா, கதாநாயகிகளை மையப்படுத்தி எடுப்படும் படங்களும் வசூல் ரீதியாகவும், வரவேற்பு ரீதியாகவும் ஹிட் அடிக்கும் என நிரூபித்துக் காட்டியவர்.

தொடர்ந்து மாயா, ஐரா, இமைக்கா நொடிகள், டோரா, அறம் உள்ளிட்ட பல படங்களில் தனி ஆளாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். சினிமா துறையில் எந்தளவு அவர் வளர்ந்தாரோ, தனிப்பட்ட வாழ்க்கையில் பல துயரங்களை கடந்தார். தென்னிந்திய சினிமாவில் அதிகளவு சம்பளம் வாங்கும் கதாநாயகி என்ற அளவு வளர்ந்த அவர், தனிப்பட்ட வாழ்க்கையில் பல ஏமாற்றங்களை சந்தித்துள்ளார் என்பதே நிதர்சனமான உண்மை.

சினிமாவுக்கு வந்த புதிதில், சிம்புவுடன் காதல் வலையில் விழ, அதன்பிறகு சினிமாவில் பல சறுக்கல்களை சந்தித்தார். சிம்புவுடன் திருமணம் வரை சென்ற உறவு மனக்கசப்பால் முறிந்த நிலையில், பிறகு படங்களில் தனது கவனத்தை செலுத்தினார். அதன் பிறகு நடிகரும், நடன இயக்குநருமான பிரபு தேவாவுடன் ஏற்பட்ட காதலும் பாதியிலேயே முறிய மீண்டும் படங்களுக்கு திரும்பினார்.

நானும் ரவுடி தான் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் தற்போது காதல் வயப்பட்டு லிவ்விங் டூ கெதரில் இருந்து வருகிறார் நயன்தாரா. இருவரும் ஒன்றாக சேர்ந்தே அனைத்து இடங்களுக்கும் பறந்து வரும் நிலையில், எப்போது திருமணம் என்ற கேள்விக்கு விக்னேஷ் சிவன் திருமணத்திற்காக பணம் சேர்த்து வைத்த பிறகு தான் என தனது இன்ஸ்டாகிராமில் பதில் அளித்திருந்தார். 

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு நயன் தாராவின் தந்தை வயது மூப்பால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், விரைவில் நயன்தாராவின் திருமணத்தை காண அவர் விரும்புவதாக கூறப்படுகிறது. அதேபோல விக்னேஷ் சிவன் வீட்டிலும் இருவருக்கும் திருமணம் நடைபெற வேண்டும் என விரும்புவதால், விரைவில் விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணத்தை எதிர்பார்க்கலாம் என தெரிகிறது. இத்தனை கலவரங்களிலும் நயன்தாரா எது குறித்தும் வாய் திறக்காமல் அமைதி காத்து வருவது குறிப்பிடத்தக்கது.