என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி! - நடிகர் ஆர்யா உருக்கம்

தமிழ்த் திரையுலகில் முன்னணிக் கதாநாயகனாக இருக்கும் ஆர்யா 2019-ல் நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது.

என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி!  - நடிகர் ஆர்யா உருக்கம்

தமிழ்த் திரையுலகில் முன்னணிக் கதாநாயகனாக இருக்கும் ஆர்யா 2019-ல் நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் ஆர்யா தன்னிடம் பழகி திருமணம் செய்வதாக ஏமாற்றி ரூ.70 லட்சம் மோசடி செய்து விட்டதாக ஜெர்மனியைச் சேர்ந்த இலங்கைப் பெண் காவல்துறையில் புகார் அளித்து பரபரப்பு ஏற்படுத்தினார். ஆர்யாவுக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஜெர்மனி பெண்ணை நான் பார்த்ததே இல்லை என்று ஆர்யா மறுத்தார். புகார் அளித்த பெண்ணிடமும் வீடியோ காலில் விசாரிக்கப்பட்டது.  அப்போது ஆர்யாவைப்போல் பேசி ஜெர்மனி பெண்ணிடம் 2 பேர் பண மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதையடுத்து காவல் துறையினருக்கு நடிகர் ஆர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்த சென்னை காவல் ஆணையர், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர், சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர் ஆகியோருக்கு நன்றி. இது என்னால் வெளிப்படுத்த முடியாத ஒரு மன உளைச்சலாக இருந்தது. என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.

இதேபோல், பல பிரபலங்கள் பெயரில் போலியான முகநூல் கணக்குகள் தொடங்கப்பட்டு மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், அண்மையில் வெளியான சர்பட்டா பரம்பரை படத்தின் மூலம் நற்பெயர் பெற்றிருக்கும் ஆர்யாவுக்கு, இப்படியொரு இழிபெயர் வந்து நீங்கியிருக்கிறது. போலியான முகநூல் பக்கங்களை உருவாக்கி மோசடி செய்வதில் எந்தப் பிரபலங்களும் தப்பிக்க முடியாது போலிருக்கிறது.