சிம்புவின் ‘மாநாடு’ படத்தின் மொத்த வசூலை வெளியிட்ட தயாரிப்பாளர்..! எவ்வளவு கோடி தெரியுமா..?
நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘மாநாடு’ திரைப்படத்தின் மொத்த வசூலை படத்தின் தயாரிப்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மாநாடு’. இந்தப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி நடித்திருந்தார். மேலும் எஸ்.ஜே. சூர்யா, பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். உலக முழுவதும் திரையரங்குகளில் வெளியான இப்படம் அதன்பின் ஓடிடியிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
அதுமட்டுமில்லாமல் கொரோனா காலகட்டத்தில் திரையரங்குகள் அனைத்தும் 50 சதவீதம் பார்வையாளர்களுடன் மட்டுமே படத்தினை திரையிட வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் வெளியாகிய இந்த திரைப்படம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி ஆகிய இரண்டிலுமே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால், தயாரிப்பாளர், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைத்து தரப்பிற்கும் நல்ல லாபத்தை ஈட்டி தந்தது என்றே சொல்லலாம். அத்துடன் ‘மாநாடு’ சிம்புவுக்கும், வெங்கட்பிரபுவுக்கும் நல்ல ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
இதனையடுத்து ‘மாநாடு’ திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக ஏற்கனவே படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் மொத்த வசூல் குறித்த அப்டேட்டை தனது சமூக வலைதளப்பக்கத்தில் சுரேஷ் காமாட்சி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ’மாநாடு’ திரைப்படம் மொத்தமாக 117 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றும், கடந்த ஆண்டின் மெகா பிளாக்பஸ்டர் படம் என்றும், இந்த படத்தை வெற்றிப்படமாக்கிய அனைவருக்கும் தனது நன்றி என்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.